என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, January 29, 2026

சதுரங்கம் 3

 

ர்ஜுனின் சிறப்புக் கட்டுரை ஒன்று அவன் நிருபராக வேலை செய்யும் விடிவெள்ளி பத்திரிக்கையில் அன்று வந்திருந்தது. ’சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளும், குற்றங்களும்என்ற தலைப்பில் அவன் ஒரு ஆழமான கட்டுரை எழுதியிருந்தான். முக்கியமாக பொதுமக்கள் அந்த மோசடிகள், குற்றங்களில் பாதிக்கப்படாமல் இருப்பது எப்படி என்பதை சிறப்பான வகையில் அலசி எழுதி இருந்தான். எத்தனை தான் எழுதியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் பத்திரிக்கையில் அவன் பெயரையும், புகைப்படத்தையும் பார்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்.

 

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆவலாக இருந்தது. அம்மா பானுமதி தான் ஹாலில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்வதும், சுவரிடம் சொல்வதும் ஒன்று தான். எந்தப் பாதிப்பும் இருக்காது. அப்பா ஞானமூர்த்தியை அவன் தேடினான். அவர் பூஜையறையில் தியானத்தில் இருப்பது தெரிந்தது. அரசியல் கட்சித் தலைவர்களில் தினமும் தியானம் செய்பவர் இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும். தியானம் என்றால் பெயருக்குப் போய் உட்கார்ந்து நேரத்தை நகர்த்தும் நபர் அல்ல அவர். பல நேரங்களில் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு அதில் மூழ்கி விடுவார்.  அர்ஜுனும் அவரைப் பார்த்து தியானம் செய்யும் முயற்சியில் ஒரு காலக்கட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். சாதாரணமாக நினைவுக்கு வராத தேவையில்லாத நினைவுகள் எல்லாம் அந்த சமயங்களில் தான் ஒன்று திரண்டு படையெடுத்து வரும். சில நாட்களில் அவன் தியானத்திற்கு விடை கொடுத்து விட்டான். அவன் அதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்.

 

அப்பாவிடம் அந்த கட்டுரையைக் காண்பித்து அவருடைய கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. அவரிடமிருந்து எப்போதுமே விருப்பு வெறுப்பில்லாத, அலங்காரச் சொற்கள் சேர்க்காத உண்மையான கருத்துக்கள் வரும்.  வார்த்தைகளில் கடுமையோ, இகழ்ச்சியோ இருக்காதே ஒழிய, எதிர்மறைக்கருத்துக்களையும் நேரடியாகச் சொல்லத் தயங்காதவர் அவர். அதுவும் வீட்டில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் அவர் அப்படித் தான். எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத செயல் அது. அரசியலில் தோல்வி அடையவும், காணாமல் போகவும் அந்த ஒரு குணாதிசயம் போதும். அவர் வெற்றிகரமான அரசியல்வாதி அல்ல என்றாலும் இன்னமும் காணாமல் போகாமல் அரசியலில் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவன் அடிக்கடி ஆச்சரியப்படும் விஷயம்.      

 

அடுத்ததாக அந்த வீட்டில் இருப்பவள் தங்கை நித்யா தான். இன்று அவள் கல்லூரிக்கு விடுமுறை நாள். அதனால் ஒன்பது மணியாகாமல் எழுந்திருக்க மாட்டாள். நேற்று நள்ளிரவு வரை அவள் படித்துக் கொண்டிருந்தாள் என்பதும் அவனுக்கு நினைவு வந்தது. அவளிடம் அந்தக் கட்டுரையைக் காட்டினால், பத்திரிக்கையில் அவளுடைய அண்ணனின் புகைப்படத்தையும், பெயரையும் பார்த்தே முகம் மலர்வாள். அடிக்கடி அண்ணனைக் கிண்டல் செய்பவளும், அவனிடம் சண்டை போடுபவளும் அவள் தான் என்றாலும் அவளைப் பொருத்த வரை அவள் அண்ணனைப் போல உலகத்தில் யாருமில்லை. தங்கையை நினைக்கையிலேயே அர்ஜுனின் முகம் மென்மையாகியது.

 

அவனுடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது அவனுடைய தோழி கீதா.  இன்னொரு பத்திரிக்கையில் நிருபராக இருப்பவள். ஏதாவது முக்கியமான பரபரப்பான செய்தி இருந்தால் ஒழிய அவள் இந்த நேரத்தில் அலைபேசியில் அழைத்துப் பேசுபவள் அல்ல. அர்ஜுன் பரபரப்புடன் அலைபேசியை எடுத்துப் பேசினான். முன்னாள் பிரபல நடிகை நர்மதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்து கொண்டிருப்பதை கீதா தெரிவித்தாள்.

 

அர்ஜுன் அவசர அவசரமாக உடைமாற்றிக் கொண்டு கிளம்பினான்.  அவன் எப்போதும் அம்மாவிடம் சொல்லி விட்டுப் போவதில்லை. பானுமதி மகனிடம் கேட்டாள். “காலை டிபனுக்கு வருவாயா, வர மாட்டாயா?”

 

வெளியே சாப்பிட்டுக்கறேன்.” என்றான் அர்ஜுன்.

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை. தலையையாவது அசைத்தாளா, இல்லையா என்று அவன் பார்க்கவில்லை.  இந்தக் கேள்வியை அவள் கேட்டது கூட, அவனுக்கும் சேர்த்து சமைக்கலாமா வேண்டாமா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளத் தான். உண்மையான அக்கறையால் கேட்கப்பட்ட கேள்வி அல்ல அது. அவனுடைய நண்பர்களின் வீட்டில் எல்லாம் அவர்களுக்கு அவர்களுடைய அப்பாவுடன் தான் பிரச்சினை இருந்தது. அப்பாவுடன் தான் அவர்களுடைய பேச்சு வார்த்தை குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட எல்லோரும் அம்மாவின் செல்லங்கள் தான். இந்த வீட்டில் தான் எல்லாம் எதிர்மாறாக இருக்கிறது. அவனுக்குப் பலசமயங்களில் அவள் அவனைப் பெற்றவள் அல்லவோ என்ற சந்தேகம் வந்திருக்கின்றது. அவன் அப்பாவின் மூத்த தாரத்தின் குழந்தையாக இருக்கலாமோ என்று கூட நினைத்து இருக்கிறான். அப்படியெல்லாம் இல்லை, அவள் தான் அவனைப் பெற்றவள் என்று தெரிந்த பிறகும், அதில் ஏதாவது தில்லுமுல்லு இருக்குமோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் அவள் மகன் தான். ஏனென்றால் அவளுடைய முகச்சாயல் தான் அவனுக்கு இருந்தது. அவளுடைய கண்கள் போலவே அவனுடைய கண்களும் மிக அழகானவை.

 

இயல்பாகவே அவள் உணர்வுகளை அதிகமாய்க் காட்டாதவள். அவள் முகத்தில் வெறுமை தான் அதிகம் தெரியும். ஆனால். அவள் தன் கணவரிடமும், மகளிடமும் ஓரளவு உயிரோட்டத்துடன் பழகக்கூடியவள். நித்யாவை அவள் பார்க்கும் பார்வையில் பெருமிதம் தெரியும். ஞானமூர்த்தியைப் பார்க்கும் பார்வையில் பேரன்பு தெரியும். ஆனால் அர்ஜுனிடம் மட்டும் எப்போதும் வெறுமை தான்அதிலும் ஒரு சூட்சுமம் உண்டு. ஞானமூர்த்தி, நித்யா முன்னிலையில் அவள் கூடுமான வரை இயல்பாக அவனிடம் நடந்து கொள்வாள். அவர்கள் இருவரும் இல்லாத நேரங்களில் அவள் சம்பந்தமே இல்லாதவள் போல நடந்து கொள்வாள்.

 

என்றாவது ஒரு நாள் அவளிடம் வெளிப்படையாகஎன்னை ஏன் அம்மா நீ வெறுக்கிறாய்?” என்ற கேள்வியைக் கேட்டு விட வேண்டும் என்று அவன் துடித்திருக்கிறான். ஆனால் அப்படியே அவன் கேட்டாலும் அவள் வெளிப்படையாக உண்மையான காரணத்தைச் சொல்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கில்லை. கண்ணிமைக்காமல்அப்படியெல்லாம் இல்லையேஎன்று சொல்லிவிட முடிந்தவள் அவள்….

 

நடிகை நர்மதாவின் வீட்டை அவன் பைக்கில் சென்றடைந்த போது அங்கே நிறைய பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சிக்காரர்களும் இருந்தார்கள். அவர்கள் பலரும் அவனுக்கு நன்றாக அறிமுகமானவர்கள். சிலர் அவனைப் பார்த்துக் கையசைத்தார்கள். அவனும் கையசைத்தான். கீதா அவனைப் பார்த்தவுடன் புன்னகையோடு அருகே வந்தாள். “ஹாய் அர்ஜுன்.”

 

அவனும் அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தான். “ஹாய் கீதா.”

 

இன்னைக்கு உன்னோட கட்டுரை ஒன்னு உங்க பத்திரிக்கையோட நடுப்பக்கத்துல பிரசுரமாகியிருக்கு இல்லையா. நான் படிக்க ஆரம்பிச்சப்ப தான் இந்த தற்கொலைச் செய்தி கிடைச்சுது. உடனே கிளம்பிட்டதால படிக்க முடியல.”

 

அவனுடைய கட்டுரை இன்று பிரசுரமாகியிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள் என்பதே அவனை சந்தோஷப்படுத்தியது.

 

தலையசைத்தபடி கேட்டான். “உண்மையாகவே தற்கொலை தானா? இல்லை கொலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கா?”

 

சந்தேகம் ஒரு நிருபருக்கு கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டிய குணம். ஒரு திறமையான நிருபர் தோற்றங்களில் ஏமாந்து விடக்கூடாது. உண்மையே என்றாலும் ஆராயாமல் தெளிவடைந்து விடக்கூடாது. கீதா புன்னகைத்தாள். “தெரியல. ஆனா கதவோ, பூட்டோ உடைக்கப்படலை. வேலைக்காரி எப்பவும் வர்ற மாதிரி எட்டு மணிக்கு வந்திருக்கா. அவ கிட்ட ஒரு செட் வெளி கேட் சாவியும், வீட்டு சாவியும் இருக்கு அவ உள்ளே போய்ப் பார்த்தப்ப நர்மதா ஃபேன்ல கயிறு கட்டி தூக்குல தொங்கிகிட்டு இருந்திருக்கா.”

 

தற்கொலைக் கடிதம் ஏதாவது…?”

 

இருக்கு. ஆனா அது அவள் எழுதினது தானான்னு இன்னும் உறுதிப்படுத்தப்படலை. வீட்டுல இருக்கற அவளோட பொருள்கள் எல்லாம் அப்படியே இருக்குங்கற மாதிரி தான் தெரியுது. எதுவும் திருட்டுப் போனமாதிரி இதுவரைக்கும் தெரியல. எல்லாத் தகவல்களும் கிடைச்ச பிறகு தான் எதுவுமே சொல்ல முடியும்…”

 

அர்ஜுன் கல்லூரிக் காலத்தில் நர்மதாவின் விசிறியாக இருந்திருக்கிறான். அக்காலத்தில் அவள் நடித்த எல்லாத் திரைப்படங்களையும் பார்த்தே தீர்வான். ஆனால் கல்லூரிப்படிப்பு படித்து முடித்து அவன் அந்த வயதுப் பைத்தியக்காரத்தனங்களை எல்லாம் விட்டொழித்த போது நர்மதா மேல் இருந்த ஈர்ப்பும் சேர்ந்து விடைபெற்றது. பின் அவளை அவன் நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. ஆனாலும் இப்போது நர்மதா இறந்து விட்டாள் என்கிற போது அவள் குறித்து ஒருவித பச்சாதாபம் அவன் மனதில் தங்கியது.  காலம் தான் எத்தனை விசித்திரமானது. தன் போக்கில் எத்தனை மாற்றங்களை அனாயாசமாகச் செய்து விடுகிறது. ஒரு சமயத்தின் உச்சங்கள் இன்னொரு சமயத்தில் எப்படி துச்சங்களாகப் போய்விடுகிறார்கள்….’

(தொடரும்)

என்.கணேசன் 



Monday, January 26, 2026

யோகி 140

 

கால ஓட்டத்தில் பின்பு நடந்தவை எல்லாம் கல்பனானந்தாவின் வேதனையை அதிகப்படுத்தின. யோகாலயத்திற்கு வெளியே தினமும் நின்ற நிருபர்கள், வழக்கு எல்லாம் பாண்டியனையும், பிரம்மானந்தாவையும் எந்த வகையிலும் அசைக்கவில்லை என்பதை அவள் நேரடியாகவே பார்த்தாள். அவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாதது போலவே நடந்து கொண்டார்கள். சைத்ரா எங்கே அடைக்கப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவில்லை. அவளை நினைக்கையில் எல்லாம் மனம் ரணமானது. உயிரோடு புதைக்கப்பட்ட நபர் யாரென்று தெரியவில்லை.

 

சைத்ராவின் அறையில் உடனிருந்த கவிதானந்தாவும், அபிநயானந்தாவும் கூடுதலாகக் கண்காணிக்கப்படுவதைப் பார்த்த போது தான் மொட்டைக்கடிதம் எழுதியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் பாண்டியனுக்கு எழுந்திருப்பதைப் புரிய வைத்தது. அவர்கள் இருவரும் சைத்ராவுடன் ஒரே அறையில் வசித்ததால் அவர்கள் அவளிடம் கொலை பற்றிச் சொல்லியிருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். மேலும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை வைத்து, யோகாலயத் தபால்களுடன் இந்த மொட்டைக்கடிதத் தபாலையும் சேர்த்து வைத்திருக்கும் வாய்ப்பும் அவர்களிருவருக்கும் இருப்பதாக பாண்டியன் எண்ணியதாகத் தெரிந்தது. அவர்கள் இருவர் அளவு அல்லா விட்டாலும், கல்பனானந்தாவையும் சந்தேகக்கண்ணோடு தான் பாண்டியன் பார்ப்பதாக அவள் உணர்ந்தாள். சைத்ரா அவளிடம் சொல்லியிருக்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் சைத்ரா, தான் பார்த்த கொலையை வேறு யாரிடமும் சொல்லி விடவில்லை என்று உறுதியாகச் சொல்லியிருப்பாள் என்றே கல்பனானந்தாவுக்குத் தோன்றியது. ஏனென்றால் கவிதானந்தா, அபிநயானந்தா, அவள் மூவருக்கும் எந்தப் பிரச்சினையும் அங்கு எழவில்லை.   ஆனால் யோகாலயாவில் காமிராக்களும், கண்காணிப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இப்படி ஒரு இடத்தில் இருக்க வேண்டி வந்ததில் கல்பனானந்தா சித்திரவதையை உணர்ந்தாள்.

 

சைத்ரா கோவிட்டில் இறந்தாள் என்ற செய்தி வெளியானதும், தொடர்ந்து அவளுடைய தந்தை தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் கல்பனானந்தாவை தனியாக அறையில் அழ வைத்தன. இறைசக்தியும் கர்மா சித்தாந்தமும் கூட சில சமயங்களில் கேள்விக்குறியாயின. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களை யாரும், எதுவும் அசைக்க முடியாது என்ற கர்வத்தில் அவர்கள் இருந்தது அவளைக் குமுற வைத்தது. காலம் போகப் போக, இனி யாரும் இவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற விரக்தியும் அவளுக்குள் எழுந்தது.

 

ஆனால் திடீரென்று ஒரு நாள் யோகாலயத்தில் அர்த்த ஜாம பூஜை ஒன்று நடந்தது. அங்கே எப்போதாவது பூஜையும், ஹோமங்களும் நடைபெறும் என்றாலும் அது இப்படி அர்த்த ஜாம பூஜையாக இருந்ததில்லை. அன்றைய பூஜையைச் செய்ய வந்திருந்தவரை பாண்டியனும், அப்போது அடிக்கடி வர ஆரம்பித்திருந்த டாக்டர் சுகுமாரனும் சேர்ந்து வரவேற்றது அவளை ஆச்சரியப் படுத்தியது. மறுநாளிலிருந்து பாண்டியன் கையில் தெரிந்த தாயத்து அவளைப் பேராச்சரியப்படுத்தியது. பெயரளவில் கூட, பிரம்மானந்தாவுக்காகவும் ஆன்மீக அடையாளங்கள் எதையும் அணிந்து கொள்ளாத பாண்டியன் கையில் தாயத்தா? இது நிஜமா, கனவா என்று கூட அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு தான் அவர்களிடம் பயமும், பதற்றமும் தெரிய ஆரம்பித்தன. கால தாமதமானாலும், கடவுளும், கர்மாவும் வேலை செய்வதை அவளால் பார்க்க முடிந்தது.  

 

ஷ்ரவன் அங்கு வகுப்புகளுக்கு வந்து புதிராக நடந்து கொண்டதும், அவன் மீது அவர்கள் அக்கறை காட்டி அவனைப் பேச வைக்க ஆர்வம் காட்டியதும் அவள் சற்றும் எதிர்பாராதது. அவன் சொன்னது எதிலும் அவளுக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் அவர்கள் அதை நம்பினார்கள் என்பது தெரிந்தது. அதுவும் அவளை ஆச்சரியப்படுத்தியது. இங்கே என்னென்னவோ புதிதாய் நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதும் புரிந்தது. இவர்களைப் பாதிக்கும் விஷயங்களில் தீர்வோ, கூடுதல் ஞானமோ தன்னிடம் இருப்பது போல் அவன் காட்டிக் கொள்கிறான் என்பதையும் அவள் யூகித்தாள். அவன் உத்தேசம் என்னவென்று ஆரம்பத்தில் அவளுக்குப் பிடிபடவில்லை. முதலில் இவர்களிடம் காசு பறிக்க தந்திரமாக அவன் செயல்படுகிறான் என்று கூட அவளுக்குத் தோன்றியது.


சைத்ராவுக்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த யோகி சமாச்சாரத்தை அவன் பேசியது அவளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அதை அவன் கண்டுபிடித்தது எதாவது விசேஷ சக்தி மூலமாகவே இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. முந்தைய அவளது சந்தேகங்களுக்கு இது பொருந்தவில்லை. அவன் அவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறான் என்று மட்டும் அவளுக்கு உறுதியாகியது. ஆனால் இன்னொரு பலி இங்கே தரப்பட வேண்டாம் என்று நினைத்து அவள் அவனை எச்சரிக்கவும் செய்தாள்.

 

பின் அவள் அவனை அதிகம் கவனிக்க ஆரம்பித்தாள். தோட்டக்காரன் மருதகாசிக்கும்  அவனுக்கும் இடையே எதோ சம்பந்தம் இருப்பது மெல்லப் புரிந்தது. அப்படியானால் இதில் இவன் ஒருவன் மட்டுமல்ல, தோட்டக்காரன் என்ற பெயரில் இவனுக்கு ஒரு கூட்டாளியும் இருக்கிறான் என்பதும் புரிந்தது. பின் தான் இவர்கள் போலீசாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. முதல்வர் தமிழகம் திரும்பி வந்ததும் சைத்ராவின் தாத்தா அவரிடம் போய்ப் பேசியிருக்கலாம், அதன் பின் நடக்கும் ரகசிய ஏற்பாடாக இது இருக்கலாம் என்ற உண்மையும் அவளுக்குப் பிடிபட்டது. 

 

ஷ்ரவனுக்கும், மருதகாசிக்கும் இடையே நடந்த துண்டுச் சீட்டுப் பரிமாற்றத்தின் பின் துண்டுச் சீட்டு கண்காணிப்பாளன் கையில் கிடைத்தும் கூட அவனோ, பாண்டியனோ எதுவும் கண்டுபிடித்து விட முடியாதது அவள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவள் என்றோ நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நல்ல காரியம் தற்போது நடக்கிறது என்ற திருப்தி அவளுக்கு ஏற்பட்டது. ஆபத்தானாலும் ஆபத்தைச் சந்திக்க முடிந்த சாமர்த்தியசாலியாகவே ஷ்ரவனை அவள் எண்ணினாள். நீண்ட ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகு அவனை முழுவதுமாக நம்பலாம், முடிந்த விதங்களில் உதவலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். 

 

ஸ்ரேயாவிடம் ஷ்ரவன் ஒப்படைத்த வேலை இரவு, பகலாக நடந்தாலும் முன்னேற்றம் ஆமை வேகத்திலேயே இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. சொல்லப் போனால் அது முன்னேற்றம் தானா, ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்குமா என்ற சந்தேகம் கூட அவள் மனதில் எழ ஆரம்பித்தது.

 

சைத்ராவின் தந்தைக்கு வந்த மொட்டைக்கடிதம் நாளிலிருந்து ஒரு மாத காலம் முன்பிலிருந்து நடந்த கொடுக்கல், வாங்கல், பணபரிவர்த்தனை, கிரையம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் பார்த்துக் கொண்டிருந்த போது தான் CMS என்ற கோப்பு அவள் கவனத்தைக் கவர்ந்தது. உள்ளே சந்திர மோகன் என்பவரின் ஆதாரும், பான் கார்டும் பார்த்த போது அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது.  அந்தப் பெயரை ஷ்ரவன் சொல்லி இருந்ததாக நினைவு. உள்ளே விலாசத்தில் சேலம் என்பதைப் பார்த்தவுடனேயே அது உறுதியாகியது. CMS என்பது சந்திரமோகன், சேலம் என்பதன் பெயர்ச்சுருக்கமாக இருக்க வேண்டும்.  சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக்கடிதம் வருவதற்கு சுமார் ஒரு வார காலம் முன்பு காணாமல் போன மனிதர்யோகாலயம் செல்வதாகச் சொல்லி விட்டுக் கிளம்பியவர் பின் வீடு திரும்பவில்லை என்பது நினைவு வந்தது. பரபரப்புடன் அவர் காணாமல் போனதாகப் புகார் தரப்பட்ட விவரத்தை இணையத்தில் தேடினாள். ஒரே ஒரு பத்திரிக்கையில் தான் அது சின்ன செய்தியாக வந்திருந்தது.   அந்த தேதியைக் குறித்துக் கொண்ட அவள்    அந்தக் கோப்பில் இருக்கும் வரவு செலவுக்கணக்கைப் பார்த்தாள். சந்திரமோகன் காணாமல் போய் நான்கு தினங்கள் கழிந்த பிறகு, தன்னிடமிருந்த சில நிலங்களை யார் பெயருக்கோ விற்றியிருக்கிறார். அது யார் பெயருக்கு என்று ஸ்ரேயா பார்த்தாள். கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயருக்கு நிலங்கள் விற்கப்பட்டு இருந்தது. பெயர் வித்தியாசமாய்த் தோன்றவே இணையத்தில் அவள் அந்தப் பெயரைத் தேடினாள்.  முகநூலில் கலிப்பாக்கம் சுந்தரகுரு என்ற பெயரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் யோகாலயத்தில் வேலை செய்வதாய் முகநூல் தெரிவித்தது.

 

ஸ்ரேயா பரபரப்புடன் ராகவனுக்குப் போன் செய்தாள்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, January 22, 2026

சதுரங்கம் 2

 

ந்த மனிதன் அவள் வீட்டு அறை ஒன்றில் பதுங்கியிருந்து கொண்டு அவள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் இந்த வீட்டுக்குள் மதியம் மூன்று மணியளவிலேயே வந்து விட்டான். அவனிடம் அவள் வீட்டு வெளி கேட் பூட்டின் கள்ளச் சாவியும், வீட்டின் பிரதான கதவின் கள்ளச் சாவியும் இருக்கின்றன. மதியம் வந்தது முதல் அவனுக்கு ஓய்வேயில்லாமல் வேலை இருந்தது.

 

உள்ளே வந்தவுடன் சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த அவனுடைய நுழைவின் பதிவை அவன் அழித்து விட்டான். இனி எதுவும் அதில் பதிவாகாதது போல் செய்து விட்டு தான் அவனுடைய மற்ற வேலைகளை அவன் செய்ய ஆரம்பித்தான். அவளுடைய லேப்டாப்பில் மட்டும் அவன் மூன்று மணி நேரம் செலவழித்திருக்கிறான். அவளுடைய கடந்த மூன்று வருடங்களின் டைரிகளைப் படித்திருக்கிறான். எங்கெல்லாம் ஒருத்தி முக்கியமான ஆவணங்களை ஒளித்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் அவன் மிகவும் பொறுமையாகச் சோதித்துப் பார்த்திருக்கிறான்.

 

இன்னும் சோதித்துப் பார்க்க இரண்டு இடங்கள் இருக்கின்றன. அதைப் பார்க்கலாம் என்று நினைத்த போது தான் அவனுடைய ஆள் அலைபேசியில் தகவல் அனுப்பினான். ”அவள் வந்து கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நிமிடங்களில் வந்து விடுவாள்.”

 

அதனால் தான் அந்த இரண்டு இடங்களை அவன் சோதித்துப் பார்க்கவில்லை. அவள் வருவதற்குள் அவன் அந்த அறையில் வந்து ஒளிந்து கொண்டான். அந்த அறை விருந்தினர் அறை. அங்கு வந்து தங்கும் படியான ஆட்கள் அந்த வீட்டுக்கு வருவதில்லை. அதனால் அவளும் அந்த அறைக்கு வருவதில்லை. அவளுடைய வேலைக்காரி மட்டும் தினமும் வந்து சுத்தம் செய்து விட்டுப் போவாள்...

 

அந்த இரண்டு இடங்களைச் சோதித்துப் பார்க்க அவனுக்கு இருபது நிமிடங்கள் தான் தேவைப்படும். அந்த இரண்டு இடங்களில் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது அவனுக்கு 99% தெரியும். ஆனால் ஒரு சதவீத வாய்ப்பையும் அவன் அலட்சியப்படுத்தியதில்லை. அலட்சியம், அவசரம் இந்த இரண்டு தவறுகளையும் அவன் தன் தொழிலில் செய்ததேயில்லை. அதனால் தான் அவன் இதுவரை பிடிபட்டதேயில்லை.  இன்னும் அவன் ஆராய வேண்டிய மிக முக்கியமான ஒன்று உள்ளது. அது அவளுடைய அலைபேசி. அவளைக் கொல்லாமல் அவன் அதை ஆராய முடியாது. இப்போதெல்லாம் பலருக்கும் அலைபேசிகள் உடலில் ஒட்டிய உறுப்புகள் போல் ஆகிவிட்டன. அவர்கள் அதை விட்டுப் பிரியும் நேரமே உறங்கியிருக்கும் நேரம் தான். அப்போதும் அவை அவர்கள் பக்கத்திலேயே இருக்கும். காலை எழுந்தவுடன் மறுபடி அவர்களுடைய கைகளில் சேர்ந்து கொள்ளும்

 

அந்த அலைபேசியை ஆராய முக்கால் மணி நேரத்திலிருந்து ஒன்றேகால் மணி நேரம் தேவைப்படலாம். அது முடிந்தால், பின் இந்த வீட்டுக்குள் பார்க்க வேண்டியது எதுவும் இல்லை.

 

அவளுடைய வங்கி லாக்கரில் அவள் ஏதாவது முக்கிய ஆவணத்தை ஒளித்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை அவன் அந்த நபருக்குத் தெரிவித்திருக்கிறான். அந்த நபர் சொன்னார். “அதை அப்புறமா பார்ப்போம். ஒரே நேரத்துல எல்லாப் பிரச்சினைகளையும் யாரும் தீர்க்க முடியாது. அப்படி அவசரப்பட்டு தீர்க்கப் போனா நம்ம அரைகுறை முயற்சிகள்ல சில புதுப்பிரச்சினைகளை உருவாக்கிடுவோம். அதனால, இருக்கற பிரச்சினைகள ஒவ்வொன்னா தான் பொறுமையாய் தீர்க்கணும்.”  

 

ஆபத்தான மனிதர் என்று அவன் அவரை புன்னகையுடன் நினைத்துக் கொண்டான். இந்த முன்னாள் நடிகை ஒரு வடிகட்டிய முட்டாள். அவருக்கு எதிரியாகும் முட்டாள்த்தனத்தை இவள் செய்திருக்கக்கூடாது. ஒருவன் தனக்குச் சமமானவர்களுடனும், தனக்குக் கீழே உள்ளவர்களுடனும் பகை வைத்துக் கொள்ளலாம். தன் சக்திக்கு மீறிய வலிமையானவர்களுடன் பகை வைத்துக் கொள்வது வடிகட்டிய முட்டாள்த்தனம்... 

 

நர்மதா எழுந்து போய் கதவைச் சரியாகத் தாளிட்டிருக்கிறோமா என்று பார்த்து விட்டு வருவது தெரிந்தது. இனி அவள் அறைக்குச் சென்று தாளிட்டுக் கொண்டால் அவன் வந்த வேலை முடியாது. அமைதியாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

*****

 

விமல் காலை கண்விழித்த போது மணி 6.10. சென்று காலைக்கடனை முடித்து விட்டு வந்து அலைபேசியை எடுத்தான். நர்மதா எதாவது தகவல் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்தான். அவளிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை. இனியும் அவளை எச்சரிக்காமல் இருப்பது ஆபத்து. அலைபேசியில் அவன் அவளை அழைத்தான். மணியடித்தும் அவள் அலைபேசியை எடுத்துப் பேசவில்லை. அவன் அலைபேசியில் நேரம் பார்த்தான். மணி 6.52. அவள் எழுந்து பாத்ரூம் போயிருக்கலாம்... பத்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் அழைத்தான். இப்போதும் அழைப்பு மணி முழுசுற்று போய் நின்றது.... அவனுக்குள் மெல்ல பதற்றம் உருவாக ஆரம்பித்தது. அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோ? இல்லை சைலண்ட் மோடில்வைத்து விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளா? சில சமயங்களில் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு அப்படித் தூங்குவது உண்டு. ஆனால் இன்று ஏனோ அப்படி இருக்கலாம் என்று நம்ப அவன் மனம் மறுத்தது. மேலும் ஏழு நிமிடங்கள் பொறுத்து விட்டு அவன் அவளை மறுபடியும் அழைத்தான். பதில் இல்லை.

 

ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்…? அவனுடைய பயம் அதிகமாகியது.  அவளுக்கும், அவனுக்கும் இடையே இருக்கும் நெருக்கம் பலரும் அறிந்தது தான். எதிரிகள் அவளுக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர்களுடைய அடுத்த இலக்கு அவனாகத் தான் இருக்கும்.... பயம் பீதியாக மாறியது.

 

அவளை அவர்கள் கொன்றிருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படி அவள் இறந்திருந்தால் அதற்குக் காரணமாக போலீஸார் சந்தேகப்படும் நபர்களில் கண்டிப்பாக அவனுக்கு முதலிடம் இருக்கும். நேற்று இரவில் அவன் தான் அவளிடம் கடைசியாகப் பேசியவன். அவன் அவளுடைய வீட்டுக்குச் செல்லவில்லை, இங்கேயே தான் இருந்தான் என்று அவன் கஷ்டப்பட்டு நிரூபித்தால் கூட, ”கடைசியாக உன்னிடம் தானே பேசினாள்? அவள் என்ன பேசினாள்?” என்ற கேள்வியிலிருந்து போலீஸார் ஆரம்பிப்பார்கள்.   கொலையாளி சிக்காத பட்சத்தில் அவனையே கொலையாளியாக்கப் பார்ப்பார்கள். அவர்களுக்கு வழக்கை முடிக்கும் அவசரம் இருக்கும். அதற்கு அவர்களுக்கு அவனை விடப் பொருத்தமான ஆள் கிடைக்காது....

 

தேவையில்லாமல் கற்பனை வளத்தை ஓட விடுகிறோமோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. அவன் மறுபடி அலைபேசியை எடுத்து அவளை அழைத்தான். அவளிடமிருந்துஹலோஎன்ற ஒரு வார்த்தை கேட்டு விட்டால் போதும்; அவன் நிம்மதியாகி விடலாம். ஆனால் இப்போதும் மணி அடிப்பது ஒரு முழு சுற்று போய் நின்றது.

 

இனி இங்கிருப்பது ஆபத்து என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. போலீஸார் வராமல் எதிரிகள் அனுப்பி வைக்கும் குண்டர்கள் வந்தாலும் அவனுக்குப் பிரச்சினையே. அவள் அவனிடம் எதையும் சொல்லாமல் இருக்க மாட்டாள் என்பதை அவர்கள் கண்டிப்பாக அறிந்திருப்பார்கள். அவளைத் தூண்டி விட்டவனே அவன் தான் என்பதை அவள் வாய் தவறிச் சொல்லியும் இருக்கலாம்....

 

அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அவசர அவசரமாக அவனுடைய சில உடைகளையும், வீட்டில் இருக்கும் ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு அவன் கிளம்பினான். எப்போதும் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அவன். ஆனால் இன்று அவனுக்குக் கண்ணாடி பார்க்கவும் தோன்றவில்லை. எங்கே போவது என்று கூட அவன் யோசிக்கவில்லை. உயிருடன் இருப்பதே மிக முக்கியம்....


(தொடரும்)

என்.கணேசன்




Wednesday, January 21, 2026

முந்தைய சிந்தனைகள் 132

 என்னுடைய ‘ஆழ்மனசக்தி அடையும் வழிகள்’ நூலில் இருந்து சில சிந்தனைத் துளிகள்...












Monday, January 19, 2026

யோகி 139


சில நாட்கள் கழித்து சைத்ரா அவளுடைய அறைக்குத் திரும்பிப் போய் விட்டாள். அறையில் உடன் இருக்கையில் பேசிக் கொண்டிருந்தது போல் பிறகு நிறைய பேச முடியா விட்டாலும் அவர்களுடைய நட்பு அமைதியாகத் தொடர்ந்தது.

 

திடீரென்று ஒரு நாள் சைத்ரா மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டாள். அன்று நூலகத்தில் அவளுக்கு வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவளுடைய பதற்றத்தைப் பார்த்த கல்பனானந்தா என்ன ஆயிற்று என்று கேட்டாள். பதில் சொல்லவும் வார்த்தைகள் வராமல் சைத்ரா திணறுவதைப் பார்த்த பின் தான் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது கல்பனானந்தாவுக்குப் புரிந்தது.

 

நூலகத்தின் உள்ளே ஒரு அறை இருந்தது. அந்த அறையில் தான் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களின் பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும். அந்த அறைக்குத் துறவிகளின் வருகை இருக்காது என்பதால் அந்த அறைக்குள்ளே கண்காணிப்பு காமிரா இல்லை. மொத்தமாக நூல்கள் எங்காவது அனுப்ப வேண்டியிருந்தால், அல்லது, வந்திருக்கும் புதிய நூல்களில் சில பிரதிகளை நூலகத்து அலமாரிகளில் வைக்க வேண்டியிருந்தால் மட்டுமே புத்தகங்களை எடுக்க நூலகத்தில் வேலை செய்யும் துறவிகள் போவார்கள். அப்படிப் போயும் உள்ளே நிறைய நேரம் பேசிக் கொண்டிருக்க முடியாது. அந்த அறைக்குள் போவதும், வெளியே வருவதும் நூலகத்தில் அந்த அறைக்கு வெளியே உள்ள காமிரா மூலம் பதிவாகும்.

 

பிரம்மானந்தாவைப் பற்றி ஒரு பக்தர் எழுதியிருந்த புதிய நூல் ஒன்று முந்தைய நாள் தான் பல பெட்டிகளில் வந்து சேர்ந்திருந்தது. அவற்றைச் சில நூலகங்களுக்கு அனுப்பவும், சில பிரதிகளை இந்த நூலகத்தில் படிக்க அலமாரியில் வைக்கவும் வேண்டியிருந்ததால் அந்த நூல்களை எடுக்கும் சாக்கில் சைத்ராவை அந்த அறைக்கு கல்பனானந்தா அழைத்துக் கொண்டு போனாள்.

 

உள்ளே போனதும்  அவள் கேட்டாள். “என்ன ஆயிற்று சைத்ரானந்தா?”

 

நேற்று.... நேற்று இரவு.... ஒரு கொலை....” நடுங்கிய குரலில் சைத்ரா சொன்னாள்.

 

கல்பனானந்தா அதிர்ச்சியடைந்தாள். “எங்கே?”

 

குரல் நடுங்க சைத்ரா சொன்னாள். “யோகாலயத்துக்குள்ளே தான்

 

விவரமாய்ச் சொல் சைத்ரானந்தா? யாரைக் கொன்றார்கள்? கொன்றது யார்?”

நடந்ததை நடுங்கியபடியே தாழ்ந்த குரலில் சைத்ரா சொன்னாள். முந்தைய நாள் நள்ளிரவு ஒரு மணி வரைக்கும் சைத்ராவுக்கு உறக்கம் வரவில்லை என்பதால் படுத்து இருப்பதும் எழுவதுமாக அவள் இருந்திருக்கிறாள். சுமார் ஒன்றரை மணிக்கு வெளியே எதோ சத்தம் கேட்டதால் ஜன்னல் வழியே பார்த்திருக்கிறாள். பாண்டியனின் இருப்பிடத்திலிருந்து ஒருவனைக் கயிறால் கட்டி சில குண்டர்கள் வெளியே தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். பாண்டியன் அவர்கள் பின்னாலேயே வந்திருக்கிறார். அவர்கள் எல்லோரும் பின்பகுதிக்குப் போயிருக்கிறார்கள்.

 

அறை ஜன்னலில் இருந்து அதற்கு மேல் பார்க்க சைத்ராவுக்கு முடியவில்லை. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவளுக்கு அறையில் இருப்பும் கொள்ளவில்லை. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் பின் பகுதியில் நடப்பது முழுவதுமாகத் தெரியும் என்பதால் அவள் மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறாள்.

 

பின்பகுதியில் முன்பே ஒரு பெரிய குழியை அவர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள். அதனுள்ளே அந்த ஆளைக் குண்டுக்கட்டாக உள்ளே போடுகிறார்கள். வாயையும், கை கால்களையும் கட்டிப் போட்டிருந்தாலும் அந்த ஆள் கஷ்டப்பட்டு திமிறுவதை அவளால் பார்க்க முடிந்தது. உயிரோடு ஆளைக் குழியில் போட்டு அவர்கள் மண்ணைப் போட்டு மூட ஆரம்பித்தார்கள். குழியை மூடி, மற்ற இடங்களில் உள்ள மணலையும் அள்ளி அதன் மீது போட்டு, மேற்பரப்பில் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்து விட்டு ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் திரும்பி வர ஆரம்பித்தார்கள். ஒருவன் மட்டும் அங்கேயே இருந்து காவல் காத்தான். யாரும் பார்க்கிறார்களா என்பதை அவன் சுற்றும் முற்றும் பார்ப்பதும் தெரிந்தது. சைத்ரா குனிந்து சத்தமில்லாமல் கீழிறங்கி வந்து விட்டாள்.  சொல்லி முடித்த போது சைத்ராவின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

 

எல்லாம் கேட்டு விட்டு கல்பனானந்தாவும் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்தாள். பின் நேற்று வந்த பெட்டியிலிருந்து மௌனமாக புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தபடியே கேட்டாள். “இறந்த ஆளை உனக்குத் தெரியுமா?”

 

இல்லை.”

 

புத்தகங்களை சைத்ரா கையில் தந்தபடி கல்பனானந்தா சொன்னாள். “நல்ல வேளை அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை…”

 

சொல்லச் சொல்ல, சைத்ரா தனதறையிலிருந்து வெளியேறி மொட்டை மாடிக்குப் போவது கண்காணிப்பு காமிராவில் போவது பதிவாகி இருக்கும், என்ற உண்மை கல்பனானந்தாவுக்கு உறைத்தாலும், அவள் அதை வெளியே சொல்லவில்லை. முதலிலேயே மிகவும் பயந்து போயிருக்கும் அந்தப் பெண்ணை அவள் மேலும் பயமுறுத்த விரும்பவில்லை.

 

சுவாமினி, இங்கே இப்படி நடக்கலாமா?” என்று தாங்க முடியாத வேதனையுடன் கேட்ட சைத்ராவை, கல்பனானந்தா வருத்த்த்துடன் பார்த்தாள். சைத்ரா தொடர்ந்து சொன்னாள். “இறந்தவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். அவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருப்பார்கள்அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்…” சொல்கையில் அவள் குரல் உடைந்தது.

 

கல்பனானந்தா வருத்ததுடன் கேட்டாள். “நாம் என்ன செய்ய முடியும் சைத்ரானந்தா?”

 

யோகிஜியிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் சுவாமினி

கல்பனானந்தா அதில் உள்ள ஆபத்தை உணர்ந்தாள்.  அந்தப் பெண் பிரம்மானந்தாவுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்கிறது என்று நம்புகிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது. அவருக்குத் தெரிந்து தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. “சொல்லிப் பிரயோஜனமில்லை சைத்ரானந்தா.” என்று மட்டும் அவள் சொன்னாள்.  

 

சைத்ரா மனத்தாங்கலுடன் சொன்னாள். “ஒரு குற்றத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டால், அடுத்தடுத்த குற்றங்கள் நடக்க நாமே உதவுவது போல் ஆகிவிடுமல்லவா சுவாமினி

 

கல்பனானந்தாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் தர்மசங்கடத்துடன் சொன்னாள். ”உண்மை தான். ஆனால் என்ன செய்வது சைத்ரானந்தா? இங்கே பாண்டியன் வைத்தது தான் சட்டம். அவரை எதிர்த்து நாம் எதுவும் செய்ய முடியாது.”

 

யோகிஜியும் எதுவும் செய்ய முடியாதா சுவாமினி?”

 

இது போன்ற நிஜங்களை ஒருவர் கோடி காட்டத் தான் முடியுமே ஒழிய, வெளிப்படையாகச் சொல்ல முடியாது. பெருமூச்சு விட்ட கல்பனானந்தா சொன்னாள். “இதை இனி யாரிடமும் நீ சொல்லாமல் இருப்பது தான் உனக்குப் பாதுகாப்பு சைத்ரானந்தா

 

சொல்லி விட்டு தானும் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு கல்பனானந்தா அறையிலிருந்து வெளியே வந்தாள். சைத்ராவும் நூல்களைச் சுமந்து கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவர்கள் அதுபற்றி அதற்கு மேல் பேசவில்லை. அன்றெல்லாம் சைத்ரா ஆழ்ந்த யோசனையில் இருப்பதை கல்பனானந்தா பார்த்தாள். 

 

மறுநாள் அவள் ஒரு நிகழ்ச்சி குறித்து பிரம்மானந்தாவின் உதவியாளரைச் சந்திக்கச் சென்ற போது அவர் பேச்சோடு பேச்சாக சைத்ரா பிரம்மானந்தாவைச் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதையும், மறுநாள் அனுமதி தரப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார். அவளுக்குப் பகீரென்றது. என்ன பைத்தியக்காரத்தனத்தை இந்தப் பெண் செய்கிறாள் என்று அவள் மனம் பதறியது. அந்தக் கொலையை பிரம்மானந்தா கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து சைத்ரா தன் மரண சாசனத்தைத் தானே எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அவரைப் பற்றி மிக உயர்வாக நினைத்திருந்த அவள், இத்தனை பெரிய அராஜகம் எல்லாம் அவருக்குத் தெரியாமலேயே இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்று அவள் நம்பியிருக்க வேண்டும்! மறுபடியும் சைத்ராவைப் பார்க்கையில் யோகிஜியைச் சந்தித்துப் பேசுவது ஆபத்தில் தான் முடியும் என்று கல்பனானந்தா சொன்னாள். ஆனால் அவளை சைத்ரா நம்பியதாகத் தெரியவில்லை.

 

அந்தப் பெண்ணைக் காப்பாற்ற கல்பனானந்தாவுக்கு வழி தெரியவில்லை.  அப்போது தான் அவளுக்கு சைத்ரா, அவளுடைய தாத்தாவுக்கும், முதல்வருக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. முதல்வர் தலையிட்டால் அந்தப் பெண்ணை நிச்சயமாய் காப்பாற்ற முடியும் என்று நம்பிய அவள் உடனடியாக சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதி, யோகாலயத்தில் இருந்து செல்லும் தபால்களோடு சேர்த்து வைத்து விட்டாள். கடிதம் நாளைக்கு அவர்களுக்குக் கிடைத்து விடும். அவர்கள் உடனடியாகச் செயல்பட்டால் கண்டிப்பாக சைத்ராவைக் காப்பாற்றி விடலாம் என்று கல்பனானந்தா நினைத்தாள். ஆனால் விதியின் தீர்மானம் வேறாக இருந்தது.

 

முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மறுநாளே வெளிநாட்டுக்குச் செல்ல, கல்பனானந்தா எடுத்த முயற்சி வீணாகியது.  எல்லாம் பிரம்மானந்தாவுக்குத் தெரிந்து தான் நடக்கிறது என்பதை வெளிப்படையாக சைத்ராவிடம் சொல்லியிருந்தால் அவளைக் காப்பாற்றியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்து தங்கியது. அவளுடைய மனசாட்சி உறுத்தியது. ஆனால் இனி எதுவும் அவள் செய்வதற்கில்லை.


(தொடரும்)

என்.கணேசன்