என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, November 10, 2025

யோகி 129

 

தேவானந்தகிரியின் உதவியாளன் தான் அவரது அலைபேசியை எடுத்தான். அவர் பூஜையில் இருப்பதாகச் சொன்னான்.

 

பாண்டியன் சொன்னார். “பரவாயில்லை. பூஜை முடிஞ்சவுடன் என்னைக் கூப்பிடச் சொல்லுங்கள்

 

சுகுமாரன் சிறிது காலமாகவே பொறுமையைத் தொலைத்தவராக இருப்பதால் அவர் சந்தேகத்துடன் பாண்டியனைக் கேட்டார். “அவர் கூப்பிடுவாரா?”

 

கூப்பிடுவார்என்றார் பாண்டியன். பாண்டியன் தேவானந்தகிரியைக் கூப்பிட்டு சந்தேகம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவானந்தகிரியின் வங்கிக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி விடுவது வழக்கம். அதனால் அவர் கண்டிப்பாக அழைப்பார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது.

 

ஷ்ரவன் மறுபடி தோட்ட வேலைக்குத் திரும்பிய போது கல்பனானந்தா தென்படவில்லை. அவன் அங்கிருந்து போகும் முன் செய்து கொண்டிருந்த வேலையை வேறு ஒரு துறவி செய்து கொண்டிருந்தார்.  அதனால் எந்த வேலையைச் செய்வது என்று யோசித்தபடி அவன் சுற்றிலும் பார்த்தான். ஒரு பகுதியில் குமரேசன் தெரிந்தான். அவன் துறவிகள் பிடுங்கிப் போட்டிருந்த களைகளை ஒரு சட்டியில் போட்டுக் கொண்டு போய் வேறொரு இடத்தில் கொட்டி விட்டு வருவது தெரிந்தது. மறுபடி களைகள் குவிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்த குமரேசன் சட்டியைக் கீழே போட்டு விட்டு சோம்பல் முறித்தான். அதுசொல்ல ஒரு தகவல் இருக்கிறதுஎன்பதற்கான சமிக்ஞை. அவன் மறுபடி குனிந்து களைகளை எடுத்து சட்டியில் போட ஆரம்பித்தான்.

 

ஷ்ரவன் குமரேசன் களைகளைக் கொட்டும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய தோட்டப் பகுதியை நோக்கி நடந்தான். அங்கு வேறு யாரும் வேலை செய்து கொண்டிருக்கவில்லை. அங்கும் நிறைய களைகள் இருந்தன. ஷ்ரவன் அந்தக் களைகளைப் பிடுங்கிப் போட ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அங்கும் களைகள் குவிய ஆரம்பித்தன.

 

குமரேசன் அதைப் பார்த்து விட்டு அதை எடுக்க வருவது போல் வந்தான். சட்டியைக் கீழே போட்டு விட்டு களைகளை அள்ளிக் கொண்டே சொன்னான். “ஆடிட்டரோட ஃபைல்ஸ் எல்லாம் கிடைச்சாச்சு. ஆனா அதை ராவ் கிட்ட ஒப்படைக்க முடியல. அவர் ஒரு சின்ன விபத்துல சிக்கி இப்ப ஆஸ்பத்திரில இருக்கார். அவர் வேலைக்கு வர குறைஞ்சது ஒரு மாசமாவது ஆகும். என்ன பண்றது?”

 

ஷ்ரவன் தோட்ட வேலையைச் செய்து கொண்டே சொன்னான். “நாளைக்குச் சொல்றேன். நம்ம வேலை முடியற வரைக்கும் தேவானந்தகிரி இங்கே வராமல் பார்த்துக்கறது ரொம்ப முக்கியம்.”

 

லேசாகத் தலையசைத்த குமரேசன் களைகள் நிரப்பிய சட்டியை எடுத்துக் கொண்டு போனான்.

 

ஷ்ரவன் தோட்ட வேலை பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்தான். அவர்கள் ராவ் என்று அழைக்கும் மோகன் ராவ், ஹேக்கிங் என்று சொல்லப்படும் ஊடுருவும் கலையில் நிபுணர். எத்தனை பாதுகாப்புள்ள இணைய தளமானாலும் அனாயாசமாய் அவர் ஊடுருவி, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாதபடி, தேவையான தகவல்களை எடுத்துக் கொண்டு விடுவார். அதே போல ஒரு கம்ப்யூட்டரில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான கோப்புகள் மற்றும் தகவல்களில் இருந்து ஒரு வழக்குக்குத் தேவையான அல்லது சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட தகவல்களைக் கச்சிதமாகப் பிரித்தெடுப்பதிலும் அவர் வல்லவர்.

 

ஆடிட்டர் திவாகரன் கம்ப்யூட்டரில் இருந்து மொத்தமாக எடுக்கப்பட்டதில் இந்த வழக்குக்குப் பயன்படுகிற தகவல் ஏதாவது இருக்கிறதா என்பதில் ஆரம்பித்து, எதன் மூலமாவது யோகாலய ரகசியங்களை ஏதாவது வழியில் வெளியே எடுக்க முடியுமா என்று யோசித்து, கண்டுபிடித்து செயல்படுத்துவது வரை அதில் நிறைய வேலைகள் இருக்கின்றன. நூறு சதவீதம் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே ஒப்படைக்க முடிந்த வேலை அது.  மோகன் ராவிடம் தான் அவன் அதுபோன்ற வேலையை ஒப்படைப்பான். இப்போது அந்த மிக முக்கிய ரகசிய வேலையை யாரிடம் ஒப்படைப்பது?

 

பாண்டியனிடம் சுகுமாரன் கேட்டுக் கொண்டிருந்தார். “பாண்டியன், அந்த நிஜ யோகி மூலமாய் நாம அந்த எதிரியைக் கண்டுபிடிக்க முடியாதா?”

 

அதுக்கு நாம முதல்ல அந்த நிஜ யோகியைக் கண்டுபிடிக்கணுமே

 

நீங்க எந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பத்திக் கேட்டாலும், நானும் ஒரு டாக்டராய் இருக்கறதால என்னால சொல்ல முடியும். அப்படி நம்ம யோகிஜிக்கும் அந்த நிஜ யோகியைத் தெரிஞ்சிருக்காதா?”

 

அந்தக் கேள்வி பாண்டியனை யோசிக்க வைத்தது. சுகுமாரனைப் போல் அவர் பிரம்மானந்தரை யோகி என்று நினைக்கவில்லை. அதனால் யோகியான பிரம்மானந்தருக்கு இன்னொரு யோகியைத் தெரிந்திருக்கும் என்ற வகையில் நினைக்கவும் முடியவில்லை. அவரை யோசிக்க வைத்தது, நிஜ யோகி பற்றி பேச்சு வந்த போதெல்லாம் பிரம்மானந்தரிடம் தெரிந்த சூட்சும மாற்றங்கள் தான். அது சம்பந்தமான எதோ அவரைப் பாதிக்கிறது, எதையோ அவர் மறைக்கிறார் என்பதை பாண்டியன் கண்டுபிடித்திருக்கிறார்...

 

அவர் யோசிப்பதைப் பார்த்த சுகுமாரனுக்கு, தான் யோசிக்க வைக்கும்படியான கேள்வியைத் தான் கேட்டிருக்கிறோம் என்று புரிந்ததால் அவர் உற்சாகமாகத் தொடர்ந்தார். “கைல வெண்ணெய வெச்சுகிட்டு நாம ஏன் நெய்க்கு அலையணும். நம்ம கிட்டயே யோகிஜி இருக்கறப்ப நிஜ யோகியைக் கண்டுபிடிக்க நாம ஏன் கஷ்டப்படணும். அப்படி அந்த நிஜ யோகியை நாம கண்டுபிடிச்சுட்டா, அவரைக் கண்டுபிடிச்சு அந்த இளைஞன் அவர் கிட்ட போறப்ப நாம அவனைப் புடிச்சுடலாமே. என்ன சொல்றீங்க?”

 

சமூகம் அறிவாளிகளாகப் பார்க்கும் பலரும், எப்படி சில விஷயங்களில் மட்டும் அடிமுட்டாள்களாய் இருந்து விடுகிறார்கள் என்று பாண்டியன் வியந்தார்.  எதையாவது சொல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்து அவரை விடுவிக்க வந்த ஆபத்பாந்தவராக தேவானந்தகிரி அப்போது அவரை அலைபேசியில் அழைத்தார். அவரிடம் பாண்டியன் நடந்ததையெல்லாம் சொன்ன போது அவரும் ஆச்சரியப்பட்டார். பூஜைகள், சடங்குகளை முறைப்படி செய்தால் கூட இது போன்ற தகவல்களை இவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொள்ள முடிவதில்லை என்றும், ஷ்ரவன் உண்மையாகவே அபூர்வ சக்தி படைத்தவனாகத் தான் தெரிகிறான் என்றும் அவர் பாராட்டினார். 

 

ஏதோ ஒரு விசேஷ பூஜைக்காக யோகியின் காலடி மண் அந்த ஆளுக்குத் தேவைப்படறாதாய் ஷ்ரவன் சொல்றான். அப்படி காலடி மண் தேவைப்படற மாதிரி மாந்திரீகத்துல விசேஷ பூஜைகள் உண்டா?”

 

பொதுவாய் யாருக்காவது செய்வினை செய்யணும்னா அப்படி அந்த ஆளோட காலடி மண் எடுத்துட்டு வந்து மாந்திரீகத்துல பயன்படுத்தறது உண்டு. ஆனால் ரொம்ப பரிசுத்தமான யோகிகள், சித்தர்கள் காலடி மண் எடுத்துட்டு வந்து அவர்களுக்கு செய்வினை செய்ய முடியாது. அது செய்யறவனையே தாக்கிடும். ஆனால் அவங்க காலடி மண்ணை வெச்சு செய்வினை சூனியம் இதனால எல்லாம் பாதிக்கப்பட்டவங்களைக் குணமாக்க முடியும்... உண்மையைச் சொல்லணும்னா அந்த மாதிரி பரிசுத்தமான சித்தர்கள் யோகிகள இந்தக் காலத்துல பார்க்க முடியறது ரொம்ப அபூர்வம். அந்த ஆள் நிஜ யோகியை அவரோட காலடி மண்ணுக்காகத் தேடறான்னா, பில்லி சூனியத்தால பாதிக்கப்பட்ட யாரையோ குணப்படுத்தறதுக்காக இருக்கலாம்..”

 

அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த  பாண்டியன் மெல்லக் கேட்டார். “செய்வினையால பாதிக்கப்பட்ட எங்களைக் கூட அப்படிக் குணப்படுத்த முடியுமா?”

 

உடனே வந்தது பதில்முடியும்.... ஆனா அந்த மாதிரி பரிசுத்தமான யோகி ஒருத்தரை நேர்ல பாக்க முடியுமான்னு என்னால சொல்ல முடியாது.”

 

அலைபேசியை வைத்து விட்டு பாண்டியன் எதோ யோசனையில் ஆழ்வது சுகுமாரனுக்குத் தெரிந்தது. சற்று முன் வரை அவருக்குப் புரியாத ஒன்று இப்போது மெல்லப் புரிந்தது. தேவானந்தகிரி உபயோகித்தபரிசுத்தமானஎன்ற சொல் அதை அவருக்குப் புரிய வைத்தது. நாத்திகராக இருந்த அவருக்கு யோகி என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்று கூடத் தெரியாது. அவர் ஒரு டாக்டர் என்பது போல பிரம்மானந்தர் ஒரு யோகி என்ற புரிதல் தான் அவருக்கு இருந்தது.  அதனால் தான் ஒரு டாக்டருக்கு மற்ற சிறப்பான டாக்டர்களைத் தெரிந்திருப்பது போல், யோகிஜிக்கு மற்ற யோகிகளைத் தெரிந்திருக்குமல்லவா என்று சற்று முன் வரை அவர் நினைத்திருந்தார்.

 

ஆனால் காலடி மண்ணுக்குக் கூட சக்தி இருக்கும்பரிசுத்தமானயோகியைப் பற்றி தேவானந்தகிரி பேசியவுடன் தான், பாண்டியனிடம் அவருக்கும் சற்று முன் கேட்டது அபத்தமானது என்பது மெல்லப் புரிந்தது. தேவானந்தகிரி சொல்லும் நிஜ யோகி வேற்றுக்கிரக மனிதனைப் போல் அன்னியமானவர் என்பதும் புரிந்தது.

 

பாண்டியன் வேறு யோசனையில் இருந்தார். இவர்கள் எல்லாரும் சொல்லும்நிஜ யோகிபிரம்மானந்தாவுக்குத் தெரிந்தவர் என்று அவருக்கு உறுதியாகத் தோன்ற ஆரம்பித்தது. ஏதோ காரணத்தால் அவர் அதை வாய்விட்டுச் சொல்லத் தயங்குகிறார் என்றும் தோன்றியது. அப்படியிருந்தால் அவரைப் பற்றி பிரம்மானந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது தான் கஷ்டம். ஆனால் ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால், பாண்டியன் கஷ்டம் பார்த்து பின்வாங்குபவர் அல்ல!

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, November 6, 2025

சாணக்கியன் 186

 

ராக்ஷசரின் கடிதத்தைப் படித்து மலைகேது உற்சாகம் அடைந்தான்அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்துச் சென்றாலும் பொது எதிரியிடம் கொண்டிருந்த வெறுப்பையும், அவன் தந்தையின் மீது கொண்டிருந்த அன்பையும் மறக்காமல் இருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்ததுமுக்கியமாக எதிரியை வீழ்த்துவதைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவ முன்வந்தது அவனுக்கு மகிழ்ச்சியளித்ததுமலைகேது உடனடியாக அந்தக் கடிதத்துடன் சென்று மூன்று மன்னர்களையும் மறுபடி சந்தித்தான்.

 

மலைகேது அவர்களிடம் கடிதத்தைப் படித்துக் காட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான்.  ”சிறந்த அறிவாளியும் அனுபவஸ்தருமான ராக்ஷசரே நம்முடன் இணையும் போது நாம் வேறெதையும் யோசிக்க வேண்டியதில்லை. துரோகத்தைத் தண்டிக்காமல் பின்வாங்குவது மட்டும் கூடாது. அடிமட்ட மனிதன் கூட ஊதியமில்லாமல் எந்த வேலையையும் செய்வதில்லை. சிறு வியாபாரி கூட தகுந்த விலை கிடைக்காமல் சிறு பொருளையும் யாருக்கும் தருவதில்லை. அப்படியிருக்கையில் நம் படைகளையெல்லாம் இவ்வளவு தூரம் கூட்டி வந்து நிறைய இழப்புகளைச் சந்தித்துப் போராடியிருக்கிறோம். முடிவில் வெற்றி கிடைத்த பின் ராக்ஷசர் சொல்வது போல் வெற்றியில் பங்கு தர மனமில்லாமல் கொல்ல சதி செய்வதை நாம் ஏற்றுக் கொண்டால், அதை எதிர்த்துப் போராடா விட்டால், மானமில்லா மன்னர்கள் என்ற அவப்பெயரை நாம் பெற்று விட மாட்டோமா? அவப்பெயரை விடுங்கள், நம்மை நாமே மன்னிக்க முடியுமா?”

 

அவர்களுக்கு அவன் பேச்சில் இருந்த உண்மைகளை மறுக்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாக நடக்கும் எதிர்பார்க்காத சம்பவங்களால் அவர்கள் நிறைய குழம்பிப் போயிருந்தார்கள். அதனால் அவசரப்பட்டு எந்த முடிவையும் அவர்கள் எடுக்க விரும்பவில்லை. யோசித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார்கள்.

 

சம்மதித்த மலைகேது திரும்பி வந்து ராக்ஷசரின் தூதரிடம் சொன்னான். “ராக்ஷசருக்கு என் வணக்கங்களைத் தெரிவிப்பாயாக. அவர் சொல்வதை நான் நன்றியுடனும், அன்புடனும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல். ஆனால் என் நட்பு மன்னர்கள் யோசிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அபிப்பிராயம் அறிந்த பிறகு நானே விவரங்களுடன் என் தூதனை அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவி.”

 

தூதராக வந்த ஒற்றன் தலையசைத்து, தலைவணங்கி விட்டு விடைபெற்றான்.

 

சாணக்கியர் மலைகேது அனுப்பிய மடலைப் படித்து விட்டு அமைதியாகச் சொன்னார். “உணவருந்தி சற்று இளைப்பாறி விட்டு வா தூதனே. நான் அதற்குள் பதில் மடல் தயாராக வைத்திருக்கிறேன்.”

 

அவன் வணங்கி விட்டுச் சென்றவுடன் அவர் நிதானமாக யோசித்து பதில் எழுத ஆரம்பித்தார்.

 

தந்தையின் மறைவால் வாடும் மலைகேதுவுக்கு ஆசிகள்.

ஒரு மனிதன் எல்லோரிடமும் சத்தியவானாகவும், நியாயம் தவறாதவனாகவும் இருக்க முடியா விட்டாலும் கூட அவன் பூஜிப்பவர்களிடமும், அவனை மிகவும் நம்பியிருப்பவர்களிடமுமாவது நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதுவே அவன் மனிதனாக இருப்பதற்குக் குறைந்த பட்சத் தகுதி. அந்தக் குறைந்த பட்சத் தகுதியையும் தக்க வைத்துக் கொள்ள உன் தந்தை தவறி விட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

 

கொடுத்த வாக்கைத் தவறுவது எனக்கு உடன்பாடானதல்ல. அதனால் தான் என் பரம எதிரியாக அனைவரும் அறிந்த தனநந்தனிடம் கூட நான் அவன் மகளுக்குப் பிடித்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்ன வாக்கை மீறவில்லை. சந்திரகுப்தனுக்கு அவன் மகள் துர்தராவைத் திருமணம் செய்து தர நான் மறுக்கவில்லை. அது குறித்து உன் தந்தை அதிருப்தி தெரிவித்த போது கூட நான் கொடுத்த வாக்கை மீற ஒத்துக் கொள்ளவில்லை. இதனை நீயும் நன்றாக அறிவாய்.

 

ஆனால் நான் உன் தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முன்னரே, அதை நிறைவேற்ற எனக்கு வேண்டிய அவகாசம் கொடுக்காமல் உன் தந்தை நம் எதிரணியில் உள்ளவர்களோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொன்று விடத் திட்டமிட்டது உனக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. வெற்றியைக் கொண்டாட கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு உன் தந்தை என்னிடம் வந்த போது, கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமில்லா விட்டாலும் கூட நான் சம்மதித்தேன். கலை நிகழ்ச்சிகளின் போது சந்திரகுப்தனைக் கொல்ல எதிரியோடு கைகோர்த்துக் கொண்டு உன் தந்தை திட்டமிட்டது துரதிர்ஷ்டமே. ஆனால் உன் தந்தையோடு கைகோர்த்த எதிரி உன் தந்தையைத் தண்டிப்பதற்கும் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது கர்மவினைப்பயன் என்றே சொல்ல வேண்டும். எங்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களைத் தோற்கடித்ததற்குப் பழி வாங்கும் விதமாக சந்திரகுப்தனோடு சேர்த்து உன் தந்தையையும் கொன்று விட எதிரி தீர்மானித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லை. கடைசி நேரத்தில் இந்தச் சதி பற்றி அறிய நேர்ந்த நான் சந்திரகுப்தனைக் காப்பாற்றிவிட முடிந்தது. உன் தந்தையோ விதைத்த கர்மத்தை அறுவடை செய்யும்படியாகி விட்டது.

 

எப்போது எங்களுடன் இருந்து கொண்டே எதிரியுடன் கைகோர்த்து எங்களை அழிக்க முற்பட்டீர்களோ அப்போதே எங்கள் நட்பையும், வெற்றியில் பங்கு கேட்கும் தார்மீக உரிமையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். நியாயமாகப் பார்த்தால் எங்களிடமிருந்து நீ எதிர்பார்க்க வேண்டியது தண்டனையைத் தான். அதை அறிந்த உன் குற்றவுணர்ச்சி தான் உன்னை பாடலிபுத்திரத்தில் இருந்து ரகசியமாய் தப்பிக்க வைத்தது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

 

உண்மை இப்படியிருக்க நீ உன் தந்தையின் மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைப்பது வியப்பாக இருக்கிறது. ஆனாலும் நான் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்திருக்கிறேன். தகவல் கிடைத்தால் அந்தச் சதியில் பங்கு பெற்ற மற்றவர்களைக் கண்டுபிடித்து, தர வேண்டிய தகுந்த தண்டனையைப் பற்றி நான் யோசிக்கிறேன்.

 

பழைய நட்பையும், உன் இளமையையும் கருத்தில் கொண்டு உன்னை எங்கள் எதிரிப் பட்டியலில் சேர்க்கவில்லை. நீயும் உன் படைகளும் ஹிமவாத கூடத்திற்குத் திரும்பிப் போக அனுமதியளிக்கிறேன். ஆனால் நீ மறுபடியும் எங்களுக்கு எதிராக ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில் இந்தக் கருணையை என்னால் நீட்டிக்க முடியாது. பிறகு நாங்கள் எதிரியாகவே உன்னை நடத்த வேண்டியிருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

 

இப்படிக்கு

சாணக்கியன்

மலைகேதுவுக்குக் கடிதம் எழுதிய கையோடு சாணக்கியர் காஷ்மீர, குலு, நேபாள மன்னர்களுக்கும் தனித்தனியாக கடிதங்கள் எழுதினார்.

 

நண்பரே,

வணக்கம்.

ஒன்றிணைந்து நாம் எடுத்துக் கொண்ட பணி மாபெரும் வெற்றி பெற்ற வேளையில் அந்த வெற்றியை நாம் பூரண திருப்தியுடன் கொண்டாட முடியாத ஒரு சூழல் துரதிர்ஷ்டவசமாக உருவாகியிருக்கிறது. ஹிமவாதகூட அரசனான பர்வதராஜன் வெற்றியின் முழுப் பங்கையும் அனுபவிக்க பேராசைப்பட்டு எதிரியின் பிரதம அமைச்சரோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொல்லும் திட்டத்தை அரங்கேற்றி விட்டார். இறையருளால் அது கடைசி நேரத்தில் என் கவனத்திற்கு வந்து சந்திரகுப்தனை நான் காப்பாற்றி விட்டேன். ஆனால் எதிரி சந்திரகுப்தனை மட்டுமல்லாமல் பர்வதராஜனையும் எதிரியாகவே பாவித்திருந்ததால் பர்வதராஜனுக்கு எதிராகவும் திட்டம் இருந்து அதில் பர்வதராஜன் பலியாகி விட்டார். நடந்ததை எடுத்துச் சொல்ல நான் மலைகேதுவை நாடிய போது மலைகேதுவும் தப்பி ஓடியிருப்பதை வேதனையுடன் நான் அறிய நேர்ந்தது. எதிரியின் வெறுப்பைப் புரிந்து கொள்ள முடிந்த எனக்கு நண்பர்களின் துரோகத்தை இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதும் திகைப்பில் இருக்கிறேன்.

 

ஆனால் எல்லா நிகழ்வுகளையும் நாம் கடந்து செல்லவே வேண்டியிருக்கிறது. நடக்க வேண்டியதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. வரும் சப்தமி நாளன்று சந்திரகுப்தனுக்கு தனநந்தனின் மகள் துர்தராவுடன்  திருமணத்தை நிச்சயித்திருக்கிறோம். தசமியன்று சந்திரகுப்தன் மகத மன்னனாக முடிசூட்டப் போகிறான். இந்த இரண்டு நாட்களிலும் பங்கெடுத்து சந்திரகுப்தனுக்கு ஆசிகள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

 

பர்வதராஜன் எங்களுக்குத் துரோகம் செய்யும் முயற்சியில் மரணமடைந்தாலும் மகத வெற்றிக்குப் பின் தங்களுக்குத் தருவதாக என்ன வாக்களித்திருக்கிறாரோ அந்த வாக்கை நிறைவேற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிச் செல்கையில் தாங்கள் அவர் வாக்களித்திருந்ததைப் பெற்றுச் செல்லலாம்.

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்!

Monday, November 3, 2025

யோகி 128

 

பாண்டியன் டாக்டர் சுகுமாரனைத் தனியாக வெளியே அழைத்துப் போய் ஷ்ரவனானந்தாவுக்கு இருக்கும் விசேஷ சக்தி விவரங்களைச் சொன்னார். சுகுமாரன் திகைப்புடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். ஷ்ரவன் நேற்று அவர்கள் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறான் என்று சொன்ன போது சுகுமாரன் தங்களுக்கு இத்தனை பிரச்சினைகளை உருவாக்கிய ஆளைப் பார்க்க வேண்டுமென்று துடித்தார். பாண்டியன் அவருக்கு அந்த நபரின் புகைப்படங்களைக் காட்டிய போது அவருக்கும் அந்த நபர் பரிச்சயமானவன் அல்ல என்று சொன்னார். பாண்டியன் தேவானந்தகிரியிடம் நேற்று பேசினதையும் சொன்ன போது சுகுமாரன் பரம திருப்தி அடைந்தார்.

 

இருவரும் அறைக்குத் திரும்பி வந்தார்கள். டாக்டர் சுகுமாரன் ஷ்ரவனைப் பார்த்த பார்வையில் மரியாதை தெரிந்தது.

 

ஷ்ரவன் சுகுமாரனிடம் சொன்னான். “என்னை மன்னித்து விடுங்கள். சில சமயங்களில் எனக்கு வேண்டாதது எல்லாம் தெரிகிறது. புதியவர்கள் பற்றி தெரிந்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் மண்டை ஓட்டைப் பார்த்ததும் பதட்டமடைந்து என்னை அறியாமல் சொல்லி விட்டேன்...”

 

சுகுமாரன் கைகூப்பினார். “தப்பேயில்லை....”

 

பாண்டியன் சுகுமாரனைத் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் இடைமறித்து ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்கள் நேற்று சொன்ன இளைஞனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன ஷ்ரவனானந்தா.”

 

ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். “எனக்கு அந்த ஆளைப் பற்றி வேறு எந்தக் காட்சியும் தெரியவில்லையேஜி.”

 

பாண்டியன் சொன்னார். “இது போன்ற சக்திகளின் பிரயோகங்களில் பரிச்சயமான ஒருவர் எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் கேரளாவில் காசர்கோட்டில் இருக்கிறார். அவரிடம் பேசிய போது அவர் அந்த ஆளைப் பற்றி மேலும் அதிகமாக உங்களுக்குத் தெரிவதற்குச் சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார்.”

 

இவர்கள் இதுவிஷயமாக தேவானந்தகிரியை உடனடியாகத் தொடர்ந்து கொண்டு பேசுவார்கள் என்பதை ஷ்ரவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதுக்குள் அவன் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தேவானந்தகிரி நேராக இங்கே வராவிட்டாலும் கூட, அவர் இதில் சம்பந்தப்படுவது அவனை எப்போதும் ஆபத்தின் எல்லைக் கோட்டில் வைத்திருக்கும் என்ற புரிதல் அவனுக்கு இருந்தது. ஆனால் ஆபத்தான விளையாட்டை அவன் ஆரம்பித்தாகி விட்டது. இனி இடையில் நிறுத்த வழியில்லை.

 

ஷ்ரவன் கேட்டான். “என்ன ஆலோசனைகள்ஜி...”

 

பாண்டியன் சொன்னார். “எதையுமே சரியான காலத்தில் முறையாக முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். இது போன்ற விசேஷ சக்தி சம்பந்தமான முயற்சிகள் அதற்குச் சாதகமான காலத்தில் தான் எடுக்கப்படவேண்டும் என்று அவர் சொல்கிறார்...”

 

ஷ்ரவன் தலையசைத்தாலும் அவன் முகத்தில் குழப்பம் தெரிவதை பாண்டியன் கவனித்தார்.  அவர் அவனிடம் விளக்கமாகச் சொன்னார். “இதெல்லாம் சரியான முகூர்த்த காலத்தில் ஆரம்பிக்கப்படுவது முக்கியம் என்று அவர் சொல்கிறார். இன்றைக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி மதியம் 11.57 க்கு நீங்கள் அந்த இளைஞன் மீது கவனம் குவிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக உங்களுக்கு அவனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று அவர் சொன்னார். இயல்பாக இருக்கும் எந்தச் சக்தியும் அந்த சமயத்தில் கூடுதலாகப் பெருகும் என்கிறார் அவர்.”

 

ஷ்ரவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 11.47.  சிறிது யோசித்து விட்டு அவன் பாண்டியனிடம் சொன்னான். “நீங்கள் 11.57க்கு அலாரம் வைக்கிறீர்களா ஜீ. நான் அது வரை என் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன். அலாரம் அடித்தவுடன் அந்த இளைஞன் மீது என் கவனத்தைக் குவிக்கிறேன். பார்ப்போம் எதாவது கூடுதலாகத் தெரிய வருகிறதா என்று...”

 

பாண்டியனுக்கு அவன் உடனடியாக அவர் சொன்னதை முயற்சி செய்து பார்க்கத் தயாரானது மிகவும் பிடித்தது.  சரியென்று அவரது கைபேசியில் அவர் அலாரத்தை 11.57க்கு வைத்தார். 

 

ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. மிகவும் கவனமாக அவன் இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும். இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல, தொடர்ந்து வரும் சூழ்நிலைகளையும் கச்சிதமாகக் கையாள வேண்டும். அவன் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து விட்டு மந்திர ஜபத்தை மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அதில் அவன் ஐக்கியமாகி லயிக்க ஆரம்பித்தான். பாண்டியனையும், சுகுமாரனையும், அந்தச் சூழ்நிலையையும் கூட மறந்தான். அவனுக்குள் அந்த மந்திரம் மட்டுமே நிறைந்திருந்தது. முடிவில் அவனே அந்த மந்திரமானான்.

 

சாந்தமும், பேரமைதியும் அவனிடம் தெரிய ஆரம்பித்தது. அவனிடம் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து பாண்டியனும், சுகுமாரனும் பிரமித்தனர். பாண்டியனுக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடையாது. அவருக்கு அதில் சிறிதும் ஈடுபாடும் இல்லாமல் இருந்ததால் அவர் மற்றவர்களிடமும் அவற்றைக் கவனித்தது இல்லை. ஆனால் அவன் இப்போது இருக்கும் நிலை நடிப்பல்ல என்பதையும் அவன் வேறெதோ உலகத்திற்குச் சென்று விட்டதையும் அவர் உணர்ந்தார். சுகுமாரனும் கிட்டத்தட்ட அவரைப் போலவே உணர்ந்தார்.

 

அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை ஷ்ரவன் உணரவில்லை. மந்திரமாய் அவனே எங்கும் வியாபித்திருந்தான். அதில் இன்னொன்றுக்கு இடம் இருக்கவில்லை. அலாரம் அடித்த போது தான் அவன் நிகழ்காலத்திற்குத் திரும்பினான். எங்கு, எதற்காக உட்கார்ந்து மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.  அவன் உருவாக்கிய கற்பனை எதிரியைப் பற்றி இனி எதையாவது சொல்லியாக வேண்டும்... மூளையில் ஒரு பொறி தட்டியது. கத்தி முனையில் நடக்கும் வித்தை தான். ஆனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

 

ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவன்... அவன் எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்....”

 

பாண்டியனும் தாழ்ந்த குரலில் பரபரப்புடன் கேட்டார். “என்ன தேடுகிறான்...?”

 

சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஷ்ரவன் சொன்னான். “யாரோ ஒரு நிஜ யோகியை?”

 

பாண்டியனும் சுகுமாரனும் ஒருவரை ஒருவர் பரபரப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பாண்டியன் கேட்டார். “எதற்கு அவன் நிஜ யோகியைத் தேடுகிறான்....?”

 

இதுவரை அவன் அவர்களுக்கு வேறொரு ஆள் மூலம் முன்பே தெரிந்ததைச் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்து விட்டான். அந்த இடத்திலிருந்து இனி அவர்களை அவன் எப்படி வழிநடத்துவது என்பதை அவனே புத்திசாலித்தனமாய் திட்டமிடலாம். திட்டம் அவனுடையதாய் இருந்தாலும் முடிவு அவர்களாய் எடுப்பது போல் இருப்பது மட்டும் இதில் மிக முக்கியம்

 

அவன் மெல்லச் சொன்னான். “அவரது காலடி மண் அவனுக்கு வேண்டியிருக்கிறது...”

 

இருவரும் திகைத்தார்கள். பாண்டியன் கேட்டார். “காலடி மண்ணா? எதற்கு?...”

 

எதோ ஒரு விசேஷ பூஜைக்கு.....”

 

என்ன பூஜை? எதற்கான பூஜை?...”

 

ம்ம்ம்....” ஷ்ரவன் எதையோ உற்றுப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டான். ”பூஜையில் பெரிய விளக்கொன்று தெரிகிறது, மயான காளியின் படம் ஒன்றும் தெரிகிறது.... நிறைய சின்னங்கள் தரையில் வரையப்பட்டு இருக்கின்றன.”

 

அவன் கூடுதலாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த பாண்டியன் அவன் எதையும் சொல்லாமல் போகவே மெல்லக் கேட்டார்.

 

அவர்கள் தேடும் நிஜ யோகி எங்கேயிருக்கிறார் என்று தெரிகிறதா?”

 

ஷ்ரவன் அந்தக் கேள்விக்கு பரசுராமன் சொன்ன பதிலையே சொல்வது நல்லது என்று எண்ணினான்.  ஏதோ தோட்டம் தெரிகிறது.....”

 

சொல்லி விட்டு அவன் மௌனமானான். பாண்டியன் பரபரப்புடன் கேட்டார். “பிறகு என்ன தெரிகிறது?”

 

பிறகு, பிறகு....” என்ற ஷ்ரவன் பின் முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டிச் சொன்னான். ”எல்லாம் மறைந்து விட்டது.” 

 

அவன் கண்களைத் திறந்த போது அவர்கள் இருவர் முகத்திலும் திகைப்பும், ஏமாற்றமும் கலந்து தெரிவதைப் பார்த்து வருத்தம் காட்டிச் சொன்னான். “காட்சி திடீரென்று வருவதைப் போலவே திடீரென்று போயும் விடுகிறது. என்னை மன்னிக்க வேண்டும்.”

 

பாண்டியன் சொன்னார். “மன்னிக்க எதுவுமில்லை ஷ்ரவனானந்தா. நீங்கள் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். அடுத்த முறையும் முகூர்த்தம் பார்த்து தொடங்குவோம். கண்டிப்பாக, கூடுதலாக எதாவது தெரிய வரும்...”

 

பாண்டியன் ஷ்ரவனை அனுப்பி விட்டார். சுகுமாரன் பாண்டியனிடம் ஏமாற்றத்துடன் சொன்னார். “நான் எதிரி பற்றிய எல்லா தகவலும் இப்போதே தெரிந்து விடும் என்று எதிர்பார்த்தேன்...”

 

பாண்டியன் சொன்னார். “அவன் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். எதிரி ஒரு நிஜ யோகியைத் தேடறான்னு கண்டுபிடிக்கவே தேவானந்தகிரிக்கு மந்திரம், யந்திரம், பூஜைன்னு எல்லாம் தேவைப்பட்டுச்சு. இவன் அது எதுவுமில்லாமல் நிமிஷங்கள்ல சொல்லிட்டான். கூடுதலாய் அவன் அந்த நிஜ யோகியை, அவரோட காலடி மண்ணுக்காக தான் தேடறான்னும் சொல்லிட்டான்.”

 

ஆனா அந்த மண் எதுக்குன்னு சொல்லலையே. அதை எப்படி தெரிஞ்சுக்கறது?”

 

தேவானந்தகிரிக்கு போன் பண்ணினா தெரிஞ்சுடப் போகுதுஎன்ற பாண்டியன் தன் அலைபேசியை எடுத்தார்..


(தொடரும்)

என்.கணேசன்