சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 25, 2024

சாணக்கியன் 106

 

புருஷோத்தமனின் இறுதிச் சடங்குகளைச் செய்யும் போதும் மலயகேதுவின் மனம் கொதித்துக் கொண்டேயிருந்தது. புருஷோத்தமனுக்கு மரியாதை செலுத்த அருகிலிருந்த பகுதிகளின் அரசர்களும், அமைச்சர்களும் வந்து சென்றார்கள். ஆம்பி குமாரனும் தன் பிரதிநிதியை அனுப்பியிருந்தான். யூடெமஸ் கூட இரங்கல் கடிதம் அனுப்பியிருந்தான். அதைப் படிக்கையில் மலயகேது தன் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையாகச் சிரமப்பட்டான்.

 

அவன் இந்திரதத்திடம் சொன்னான். “இவன் பிணத்தைப் பார்க்காமல் என் மனம் ஆறாது அமைச்சரே. நாம் உடனடியாக அவனை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு செல்வதைத் தவிர வேறு கௌரவமான வழி எனக்குத் தெரியவில்லை”

 

இந்திரதத் அமைதியாகச் சொன்னார். ”நான் ஏற்கெனவே சொன்னபடி அதில் சிக்கல் இருக்கிறது இளவரசே. இப்போது நம்மிடம் இருக்கும் படைகளில் நம் வீரர்களின் எண்ணிக்கை பாதி தான். ஒரு பகுதி யவன வீரர்கள். மீதமுள்ளவர்கள் மற்ற பகுதிகளின் வீரர்கள். யாரும் தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் இருக்கவும், எல்லோர் மீதும் கட்டுப்பாட்டை வைத்திருக்கவும் அலெக்ஸாண்டர், தான் கைப்பற்றிய எல்லாப் பகுதிகளிலும் இந்த யுக்தியைத் தான் கையாண்டு இருக்கிறான். யூடெமஸை எதிர்த்துப் போரிட யவன வீரர்கள் கண்டிப்பாக முன்வர மாட்டார்கள். மற்ற பகுதி வீரர்களும் சத்ரப்பான அவனை எதிர்க்கத் தயக்கமே காட்டுவார்கள். அப்படி இருக்கையில் நம் வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் வெற்றி பெறுவது கஷ்டம்.... நான் ஆம்பி குமாரனுக்கு நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதி நமக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். சத்ரப்பான அவன் அதைச் செய்யா விட்டால் நீதி வேண்டி வேறு வழியைத் தேடும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவோம் என்றும் தெரிவித்திருக்கிறேன்.”

 

மலயகேது சந்தேகத்தோடு கேட்டான். “அவன் நமக்கு உதவுவான் என்று நினைக்கிறீர்களா?”

 

இந்திரதத் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அவன் உதவுவான் என்று தோன்றவில்லை. விசாரிக்கிறேன் என்று சொல்லி யூடெமஸிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் எழுதி தன் பொறுப்பு முடிந்தது என்று சும்மாயிருந்து விடுவான் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

மலயகேது இயலாமை கலந்த கோபத்தோடு சொன்னான். “அதனால் நாமும் சும்மா இருந்து விடலாமென்று சொல்கிறீர்களா அமைச்சரே. அது மட்டும் முடியாது. அப்படி நான் இருந்து விட்டால் ஒரு வீரகுலத்தில் பிறந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.”

 

இந்திரதத் மெல்லச் சொன்னார். “இன்னொரு வழி இருக்கிறது. யூடெமஸுக்கு எதிராகப் போரிட நாம் சந்திரகுப்தனின் உதவியைக் கேட்கலாம்.”

 

“அவன் உதவுவானா?”

 

“யவனர்களுக்குப் பதிலாக அவன் தலைமையை நாம் ஏற்றுக் கொண்டால் அவன் உதவும் வாய்ப்பிருக்கிறது.”

 

மலயகேது யோசித்தான். உதவி செய்ய வருபவன் எஜமானாகி விடுவதை ஏற்க அவனுக்குத் தயக்கமாகத் தான் இருந்தது. அதுவும் சிலகாலம் முன்பு வரை தட்சசீல மாணவனாகச் சாதாரணமாக இருந்த ஒருவன் வீரபாரம்பரியம் மிக்க கேகயத்தின் மீது அதிகாரம் செலுத்த முடிந்தவனாக மாறுவது அவனுக்குச் சிறிது நெருடலாகத் தான் இருந்தது.  

 

மலயகேது சொன்னான். “தந்தை இருந்த வரை அவனுடைய புரட்சிப்படையினரை அடக்கி நம்மை அண்ட விடாமல் தூரத்திலேயே வைத்திருந்தார். அவன் தலைமையில் நாம் இயங்குவதை விட நம் தலைமையின்கீழ் அவன் வருவதல்லவா நமக்குப் பெருமை”  

 

“உண்மை தான் இளவரசே. ஆனால் பிலிப்பின் மரணத்திற்குப் பின் நிலைமை மாறி விட்டது. பிலிப்பைக் கொன்று யவனர்களை வாஹிக் பிரதேசத்திலிருந்து துரத்த முடிந்த அவனுக்கு யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்ட நம் தலைமையை ஏற்கும் அவசியம் இல்லை. பிலிப்பைக் கொன்ற பிறகும் அவனை எதுவும் செய்ய முடியாத நிலைமையில் தான் சத்ரப்களான யூதிடெமஸும், ஆம்பி குமாரனும் இருக்கிறார்கள். அதனால் சந்திரகுப்தன் நம்மைவிடச் சௌகரியமான நிலைமையில் தான் இருக்கிறான்.”

 

மலயகேது தயக்கத்துடன் கேட்டான். ”நமக்கு வேறு வழியில்லையா?”

 

“என் அறிவுக்கெட்டிய வரை இல்லை.”

 

“சந்திரகுப்தன் நமக்கு உதவ முன்வருவானா? அவன் உதவி யூடெமஸை வீழ்த்த நமக்கு உதவுமா?”

 

இந்திரதத் சொன்னார். “அவனுடைய ஆசிரியர் விஷ்ணுகுப்தர் என் நண்பர். அவரிடம் உதவி கேட்டால் அவர் நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மேலும் அவர்களது அடுத்த இலக்கு மகதம் என்பதால் தனநந்தனை வீழ்த்த சந்திரகுப்தன் தன் படைவலிமையை விரிவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதனால் நமக்கு உதவினால் அவனுக்கும் இலாபம் தான். அவனுடன் இணைவது யூடெமஸை வீழ்த்த நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன் இளவரசே.”

 

மலயகேது நிறைய யோசித்தான். தந்தையை இழந்த பிறகும் யூடெமஸின் அதிகாரத்தின் கீழ் இருப்பதை விட அவனை ஒழித்துக் கட்ட உதவமுடிந்த சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொள்வது மேல் என்று அவனுக்குத் தோன்றியது.

 

ந்திரகுப்தன் தாயின் வரவுக்குப் பின் பெரும் நிம்மதியை உணர்ந்தான். ஒரு காலத்தில் அவள் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் குறித்து அடிக்கடி கவலைப்பட்டது போல இப்போது அவன் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. வாஹிக் பிரதேசத்தின் நிர்வாக வேலைகளில் அவனால் நிம்மதியாக ஈடுபட முடிந்தது. சாணக்கியர் அதில் எல்லாம் எந்தத் தலையீடும் செய்யாமலிருந்தார். அது மட்டுமல்லாமல் முக்கியப் பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்ற மிகமுக்கிய விஷயங்களில் அவன் அவரைக் கலந்தாலோசிக்க முற்பட்ட போது கூட அதைக் காது கொடுத்து கேட்க அவர் மறுத்து விட்டார். “நீ உன் விருப்பம் போல செய்” என்று ஒதுங்கி விட்டார். ஆரம்பத்தில் அவனுக்கு அவர் அவன் மீது ஏதாவது கோபம் கொண்டு சொல்கிறாரோ என்று கூட பயம் வந்திருக்கிறது.

 

“ஏன் ஆச்சாரியரே இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் காட்டிய வழியில் அல்லவா நான் இத்தனை நாட்களும் பயணித்திருக்கிறேன். இப்போது மட்டும் ஏன் எனக்கு அறிவுரை சொல்ல மறுக்கிறீர்கள்”

 

“முட்டாளுக்கு மட்டுமே தொடர்ந்து அறிவுரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். புத்திசாலிக்குத் தொடர்ந்த அறிவுரைகள் தேவையில்லை. நீயே சரியாக முடிவெடுக்கும்  தகுதியைப் பெற்ற பிறகும் நான் அதில் தலையிடுவது உன் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் நல்லதல்ல சந்திரகுப்தா. எல்லா விஷயங்களிலும் என்னைச் சார்ந்தே நீ இருப்பது ஆசிரியனான எனக்கும் பெருமையல்ல.”

 

“இல்லை ஆச்சாரியரே. நான் தவறாக எதாவது முடிவெடுத்து விட்டால்?’”

 

“அதை உணரும் போது அதை நீயாக மாற்றிக் கொள்வாய். அது தான் சரியாகக் கற்றுத் தெளியும் முறை.  மிகப்பெரிய தவறு எதையாவது நீ செய்யவிருக்கும் பட்சத்தில், அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் பட்சத்தில், நானாகவே கண்டிப்பாக அதைச் சுட்டிக் காட்டுகிறேன். மற்றபடி நீ உன் அறிவு சொல்கிறபடி முடிவுகள் எடுப்பது தான் சரி.”  

 

அதனாலேயே சந்திரகுப்தன் அவர் தலையிடாத விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுத்தான். அவர் போலவே பல விஷயங்களில் சிந்திக்கக் கற்றிருந்த அவன் பெருந்தவறான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. ஓரிரு நியமனங்களில் அவர் சற்று வேறு மாதிரியான முடிவுகள் எடுத்திருப்பார் என்றாலும் கூட அவன் முடிவுகளும் மோசமானவையாக இருக்கவில்லை என்பதால் அவர் தன் கருத்துகளை அவனிடம் சொன்னதில்லை.

அவர் அவன் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டே இருந்தார். படிப்பது, ஆட்களைச் சந்திப்பது, எங்காவது பயணம் செய்வது என்று ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தார். சில சமயங்களில் என்ன செய்கிறார், எதற்காகச் செய்கிறார் என்பதை அவனிடம் சொல்வார். சில விஷயங்களைச் சொல்லவே மாட்டார்.  அந்த விவரங்கள் அவனுக்கு அவசியமில்லாதவை என்று அவர் நினைப்பதாக அவனுக்குத் தோன்றும். ’உன் வேலையை நீ செய்; என் வேலையை நான் செய்கிறேன். கண்டிப்பாக இருவரும் தெரிந்திருக்க வேண்டியதை மட்டும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வோம்.’ என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை.

 

அதிலும் சந்திரகுப்தன் பிரமிப்பையே உணர்ந்தான். எதிலும் தனக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று அவர் என்றுமே ஆசைப்பட்டதில்லை. அவன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்றும் அவர் எப்போதும் நினைத்ததில்லை. அவர் நிலைமையில் இருக்கும் எந்த மனிதனாலும் இது சாத்தியப்பட்டிருக்காது என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் அவரை ஒரு முறையாவது அவன் சந்தித்துப் பேசாமல் இல்லை. அவரிடம் சென்று பேசி விட்டு வரும் போதே மனம் தெளிவாவது போல் அவன் உணர்வான்.  

 

இன்றும் அவரைச் சந்திக்கச் செல்லும் முன் காவலனை அழைத்துக் கேட்டான். “ஆச்சாரியர் அவர் அறையில் தான் இருக்கிறாரா, இல்லை வெளியே சென்றிருக்கிறாரா?”

 

காவலன் சொன்னான். “கேகய அமைச்சர் அவரைச் சந்திக்க வந்துள்ளார் அரசே. ஆச்சாரியர் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்”

(தொடரும்)

என்.கணேசன்   

Monday, April 22, 2024

யோகி 46


செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சுகுமாரனின் கைக்குட்டையை எடுத்துக் கொண்டு போன இளைஞன், சுகுமாரனின் வீடிருக்கும் தெருக்கோடியில் பொறுமையாகக் காத்திருந்தான். சுகுமாரனின் குடும்பத்தினர் கும்பகோணம் போயிருக்கிறார்கள். பெரிய பங்களாவாக இருந்த அந்த வீட்டில் சுகுமாரன் மட்டுமே இப்போது தனியாக இருக்கிறார். அவரும் சற்று நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார்.  மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் சற்று இளைப்பாறி விட்டு மாலை ஐந்து மணியிலிருந்து ஐந்தே கால் மணிக்குள் அவர் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார். இது வழக்கமாய் நடப்பது தான். அவரது வீட்டை, பகலில் ஒரு கூர்க்காவும், இரவில் ஒரு கூர்க்காவும் காவல் காக்கிறார்கள். வீட்டில் டாபர்மேன் நாய் ஒன்று இருக்கிறது. இப்போது அது வீட்டின் பின் பக்கமிருக்கும் கூண்டில் இருக்கிறது. இரவு சுகுமாரன் வந்த பின் தான் அது கூண்டிலிருந்து விடுவிக்கப்படும். மறுநாள் காலை வரை வீட்டைச் சுற்றி உலாவிக் கொண்டு தானிருக்கும். காலையில் மருத்துவமனைக்குப் போவதற்கு முன் தான் சுகுமாரன் அதை கூண்டில் அடைத்து விட்டுப் போவார். அதனால் இரவிலிருந்து காலை வரை அதன் ஆர்ப்பாட்டம் அதிகமாய் இருக்கும். தெருவில் செல்லும் பாதசாரிகள், தெரியாமல் அவர் வீட்டு கேட் பக்கம் நெருங்கி நடந்தால் கூட, அது மிக ஆக்ரோஷமாய் அவர்களை மிரட்டும்...

 

டாக்டர் சுகுமாரனின் கார் வீட்டை விட்டு வெளியேறியதை அந்த இளைஞன் பார்த்தான். அதன் பின் சரியாக ஏழு நிமிடங்கள் கழித்து அந்த இளைஞன் அவர் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  இருபக்கமும் வேடிக்கை பார்த்தபடி நிதானமாய் நடந்த அவன் அவர் வீட்டருகே வந்த போது திடீரென்று மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நின்றான். அவன் பார்வை கேட் கம்பிகளின் இடையே தெரிந்த முன்புறத் தோட்டத்தில் லயித்து நின்றது. அதை கூர்க்கா கவனித்தான். வழிப்போக்கர்கள் சிலர் அப்படி அந்த அழகான தோட்டத்தை ரசித்து நின்று பார்த்து விட்டுப் போவது உண்டு என்பதால் அவன் அந்த இளைஞனை சந்தேகப்படவில்லை.

 

சில வினாடிகள் நின்று அந்தத் தோட்டத்தின் மஞ்சள் பூக்களை ரசித்துப் பார்த்த இளைஞன் கூர்க்காவை நெருங்கி சொன்னான். “அந்த மஞ்சள் செடியோட நாத்து ஒன்னெ ஒன்னு தருவீங்களா? பல தடவை நர்சரில இருந்து வாங்கி எங்க வீட்டுல வெச்சி பார்த்துட்டேன். இவ்வளவு நல்லா வர மாட்டேங்குது.”

 

கூர்க்கா சொன்னான். “ஓனர் திட்டுவாரு

 

நான் காசு வேணும்னாலும் தரேன். நர்சரில என்ன ரேட்டோ அதைக் குடுத்துடறேன். ஒரே ஒரு செடி கொஞ்சம் மண்ணோட குடுங்க போதும்.” என்று சொன்னவன் நூறு ரூபாய் தாள் ஒன்றை சட்டைப் பையிலிருந்து எடுத்தான்.

 

கூர்க்கா யோசித்தான். வீட்டில் யாரும் இல்லை. வரிசையாக இருக்கும் பல நாற்றுகளில் ஒரே ஒரு நாற்றை எடுத்துக் கொடுத்தால் யாருக்கும் தெரியப் போவதுமில்லை

 

ந்த இளைஞன் நூறு ரூபாயை நீட்ட கூர்க்கா வாங்கிக் கொண்டான். இளைஞன் தன் கையில் மடித்து வைத்திருந்த ப்ளாஸ்டிக் பையையும், பாலிதீன் கையுறையையும் தந்து சொன்னான். “ஒருத்தர் சொன்னார். இந்தச் செடியை மட்டும் கைபடாமல் மண்ணோட எடுத்துட்டு போய் நட்டால் தான் நல்லா வளரும்னு. அப்படியே உங்க கையும் மண்ணுல படாம எடுத்துக் குடுங்க பார்ப்போம். இந்த தடவையாவது எங்க வீட்டுல வளருதான்னு….”  

 

அந்த இளைஞன் சொன்னது வினோதமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றினாலும், அவன் பணம் தந்திருந்ததால் கூர்க்கா மறுக்கவில்லை. மண்ணைத் தொட்டு, கைகழுவும் அவசியமும் இல்லை என்பதால் அந்தக் கையுறையை மாட்டிக் கொண்டு ப்ளாஸ்டிக் உறையை எடுத்துக் கொண்டு உள்ளே போய் ஓரமாய் இருந்த ஒரு நாற்றை எடுத்து சிறிது மண்ணையும் எடுத்து ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான்.

 

அந்த இளைஞன்தேங்க்ஸ்என்று சொல்லி அந்த ப்ளாஸ்டிக் பையை மிகக் கவனமாக வாங்கிக் கொண்டான்.  பின் தலையசைத்து விட்டு நகர்ந்தான். நடந்தபடி கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். 5.35. பரசுராமன் இந்த மண்ணை சரியாக 6.42க்கு அவர் வீட்டிற்குக் கொண்டு வந்து தரச் சொல்லி இருக்கிறார். தெருக்கோடியில் அவன் நிறுத்தியிருக்கும் பைக்கில் அவர் வீட்டுக்குச் செல்ல சுமார் ஒரு மணி நேரம் எப்படியும் தேவைப்படும்

 

தெருக்கோடியில் அந்த நாற்றை வீசி விட்டு மண்ணை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு அந்த இளைஞன் பைக்கைக் கிளப்பினான். 

 

ரியாக 6.42க்கு பரசுராமன் வீட்டு வாசலில் அந்த இளைஞன் சுகுமாரன் வீட்டு மண் இருந்த ப்ளாஸ்டிக் உறையுடன் நின்றான். பரசுராமன் கருப்புத் துணியைத் தலையில் கட்டியிருந்தார். கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து முழுமையாக கருப்பு ஆடைகளில் இருந்தார். அவர் அவனிடமிருந்து அந்த ப்ளாஸ்டிக் உறையைத் தன் கையில் வாங்காமல் கீழே அவர் கைகாட்டிய இடத்தில் வைத்துவிடச் சொன்னார். அங்கே ஒரு முக்கோண வடிவம் சிவப்பு  நிறத்தில் வரையப்பட்டிருந்தது. அந்த இளைஞன் அங்கே வைத்து விட்டுப் போய் விட்டான்.

 

பரசுராமன் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை ஜெபித்தார். பின் கண்களைத் திறந்து அதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். அவருடைய ஹாலில் ஏற்கெனவே நிறைய சின்னங்களும், யந்திரங்களும் பல வண்ண நிறங்களில் வரையப்பட்டு இருந்தன. எல்லாவற்றிற்கும் நடுநாயகமாய் மயான காளியின் பெரிய சிலை ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு பெரிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

 

மயான காளியின் முன்னால் பெரியதாக ஒரு மண்டலம் வரையப்பட்டிருந்தது. அந்த மண்டலத்தின்  நடுவில் குங்கும நீரில் தோய்க்கப்பட்ட ஒரு சிறிய கத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மண்டலத்தைச் சுற்றி சில சின்னச் சின்னங்களும், யந்திரங்களும் வரையபட்டிருந்தன.

 

பரசுராமன் மந்திரங்கள் ஜெபித்தபடி, இளைஞன் கொண்டு வந்த ப்ளாஸ்டிக் பையிலிருந்து மண்ணை ஒரு முக்கோணத்தில் சிறிது கொட்டினார். இன்னொரு முக்காணத்தில் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்ட கைக்குட்டையை வைத்தார். பரசுராமன் ஏற்கெனவே சேதுமாதவனிடம் இருந்து சைத்ராவின் சில புகைப்படங்கள் வாங்கி வந்திருந்தார். அவற்றிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து மயான காளியின் சிலை மீது சாய்த்து நிறுத்தினார். அந்தப் புகைப்படத்தில் சைத்ரா மஞ்சள் நிறப் புடவை அணிந்து புன்னகைத்தபடி நின்றிருந்தாள்.

 

எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்து, திருப்தியடைந்த பரசுராமன் தன் விசேஷ பூஜையை ஆரம்பித்தார்.

 

சுகுமாரன் அன்று இரவு நண்பர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஓட்டலில்    அளித்த விருந்தில் கலந்து கொண்டு கிளம்பும் போது நேரமாகி விட்டது. ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது பதினோரு மணி ஆகியிருந்தது. அந்த நேரத்தில் சென்னை நகர வீதிகளில் பயணிப்பது ஓரளவு சுலபம். போக்குவரத்து நெரிசல், ஊர்தல் இன்றி வேகமாய் போக முடிவது அவருக்கு மிகப் பிடிக்கும். பகல் நேரங்களில் எல்லாம், எத்தனை விலையுயர்ந்த காராய் இருந்தாலும், எத்தனை வேகமாய்ப் போக முடிந்ததாய் அது இருந்தாலும், ஒரு பயனும் இல்லை

 

திடீரென்று சுகுமாரன் வயிற்றுக்குள் ஏதோ எரிச்சலை உணர்ந்தார். சாப்பிட்டதில் ஏதோ ஒன்று மிகவும் காரமாய் இருந்திருக்க வேண்டும். பேசிக் கொண்டே சாப்பிட்டதில் அப்போது தெரியவில்லை போலிருக்கிறதுஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் காசைக் கணக்கில்லாமல் வாங்குகிறார்களே தவிர தரமான உணவைத் தருவதில்லை. பகட்டுக்குத் தான் பணம்

 

கார் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ வித்தியாசமான அமானுஷ்யமான ரீங்காரம் அவர் காதில் ஒலிக்க ஆரம்பித்தது. அவருடைய கார் அவர் வசிக்கும் தெருவுக்குள் திரும்பிய போதே  அவர் நாய் டாமி குரைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இன்று அவனை கூண்டிலிருந்து விடுவிக்கும் நேரம் கழிந்து விட்டதால் கோபத்தில் குரைக்கிறானோ?

 

அவர் கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன் கூர்க்கா அவசரமாக கேட்டைத் திறந்தான். போர்ட்டிகோவில் காரை அவர் நிறுத்தி விட்டு இறங்கிய போது சைத்ரா தோட்டத்தில் நின்றிருந்தாள். மஞ்சள் நிறச் சேலை அணிந்திருந்த அவள் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

மிகத் தத்ரூபமாகத் தெரிந்த அந்தக் காட்சியில் சுகுமாரனின் இதயம் துடிக்க மறந்தது. பீதியில் கண்கள் விரிய அவர் சிலை போல் நின்றார்.


(தொடரும்)

என்.கணேசன்

Thursday, April 18, 2024

சாணக்கியன் 105

 

க்ளைக்டஸ் இந்தப் பைத்தியக்காரனிடம் வந்து இப்படி சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டான். சொன்னதை அனுசரிக்காதவர்களை எல்லாம் விஷம் வைத்துக் கொல்வதென்றால் வாழ்க்கையில் யூடெமஸுக்கு விஷம் கலக்கவே நேரம் போதாதே! இவனுக்கு எதிராகப் பேசுவதானால் யோசித்து மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் போலிருக்கிறதே. இந்த மனநோயாளியிடமிருந்து உயிரோடு தப்ப முடியுமா?

 

யூடெமஸ் சிரித்துக் கொண்டே கேட்டான். “க்ளைக்டஸ் இப்படி இடி விழுந்தது போல் ஏன் ஸ்தம்பித்து நிற்கிறாய்? புருஷோத்தமன் உனக்கு மிக வேண்டப்பட்டவனா?”

 

“அப்படியெல்லாம் இல்லை. ஆனால் அனாவசியமாய் இந்தப் பிரச்னைக்குரிய முடிவை நீங்கள் எடுத்து விட்டது போல் எனக்குத் தோன்றுகிறது.”

 

யூடெமஸ் அலட்சியமாய் கேட்டான். “யாருக்குப் பிரச்னை? ஒருவேளை நம் மீது அவர்களுக்குச் சந்தேகமே வந்தாலும் அவர்கள் என்ன செய்ய முடியும்? யாரிடம் அவர்கள் புகார் சொல்ல முடியும்? கேகயம் என் நிர்வாகத்திற்கு உட்பட்டது என்பதால் எதுவானாலும் முடிவில் என்னிடம் தானே அவர்கள் வந்தாக வேண்டும். அல்லது ஆம்பி குமாரனிடம் புகார் கொடுக்கலாம். ஆனால் அவர்களிடம் ஆதாரம் என்ன இருக்கிறது. நீயாக வாய் திறந்து எதுவும் சொல்லாத வரை யாருக்கும் நிச்சயமாக எதுவும் தெரிய வழியில்லை..”

 

அதுவரை தன்னையும் சேர்த்து அவர்கள் சந்தேகிக்கலாம் என்ற எண்ணமே க்ளைக்டஸுக்கு வரவில்லை. யூடெமஸ் சொன்ன பிறகு தான் அதற்கும் வாய்ப்பிருப்பதாக அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஆம்பி குமாரனே எத்தனையோ தேவலை என்று சொல்லக்கூடிய அளவில் ஒருவனைச் சந்திக்க முடியும் என்று க்ளைக்டஸ் இது வரை நம்பியிருக்கவில்லை. விதி வலிது…

 

க்ளைக்டஸ் சொன்னான். “நான் எதையும் அவர்களிடம் சொல்லப் போவதில்லை.”

 

திருப்தியடைந்தவனாக யூடெமஸ் சொன்னான். “நல்லது. நாளை அதிகாலை சீக்கிரமே கிளம்பி விடுவோம். நாம் கிளம்புவதற்குள் அவர்கள் கண்டுபிடிக்க முடியாது. படுக்கையில் இருந்து புருஷோத்தமன் எழாதது நேற்றைய விருந்தில் அதிகமாக மதுவருந்தியதன் காரணமாக என்று நினைத்துக் கொள்வார்கள்.  நாம் அவன் மரணச் செய்தி தெரியும் போது இங்கே இருந்தால் சம்பிரதாயத்திற்காவது துக்கம் அனுஷ்டித்து இங்கே ஈமக்கிரியைகள் முடியும் வரை தங்க வேண்டியிருக்கும்.”

 

க்ளைக்டஸ் சந்தேகத்தோடு கேட்டான். “நாம் அவசர அவசரமாக முன்பே கிளம்பிப் போனால் அவர்களுக்குச் சந்தேகம் வராதா?”

 

“நான் தான் முன்கூட்டியே அதிகாலை கிளம்புகிறோம் என்று சொல்லி விட்டேனே. அதனால் நாம் போவது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் எழுப்பாது. நீ என்னுடன் புஷ்கலாவதிக்கு வருகிறாயா?”

 

“இல்லை. எனக்கு தட்சசீலத்தில் சில அவசர வேலைகள் முடிக்க வேண்டியிருக்கின்றன. நீங்கள் சொல்லி அனுப்பியதால் பாதியில் விட்டு விட்டு வந்தேன்….”

 

க்ளைக்டஸுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அதிகாலையில் எழுந்து யூடெமஸ் கிளம்புவதற்குச் சற்று முன்னதாகவே கிளம்பியவன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று குதிரையை மின்னல் வேகத்தில் தட்ச சீலத்தை நோக்கிச் செலுத்தினான்.

 

யூடெமஸ் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததால் கேகய சேனாதிபதி அதிகாலையிலேயே ஐநூறு யானைகளை  அணி வகுத்து நிறுத்தியிருந்தான். யவன வீர்ர்களும், பாகர்களும், யானைப் பயிற்சியாளர்களும் கூடத் தயாராக இருந்தார்கள். வந்த வேலை முடித்துக் கொண்ட யூடெமஸ் புஷ்கலாவதிக்கு எந்த வருத்தமும் இல்லாமல் கிளம்பினான்.

 

யூடெமஸ் யூகித்தபடியே புருஷோத்தமன் படுக்கையிலிருந்து வழக்கமான பொழுதில் விழித்தெழாதது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.  முந்தைய நாளின் விருந்தின் தாக்கம் என்றே காவலர்களும் பணியாளர்களும் நினைத்தார்கள்.

 

ஐநூறு யானைகளோடு யூதிடெமஸ் போனதைக் கேள்விப்பட்டு திகைத்த இந்திரதத், கடைசி நேரத்தில் புருஷோத்தமன் ஏதாவது வாக்களித்து தான் இது நடந்திருக்கிறதா என்று அறிய விரும்பி மன்னரைச் சந்திக்க வந்த போது தான் மன்னர் இறந்து போயிருப்பது தெரிய வந்தது. ராஜ வைத்தியர் உடனடியாக வரவழைக்கப்பட்டார்.  அவர் உடலைப் பரிசோதித்து விட்டு அரசர் இறந்து போக விஷமே காரணம் என்றும் கண்டுபிடித்துச் சொன்னார். புருஷோத்தமன் உடலில் அங்கங்கே நீலமாகி இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.    

 

இந்திரதத் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார். சசிகுப்தனின் எச்சரிக்கைக் கடிதம் முன்பே வந்திருந்ததால் அவர் யூடெமஸ் தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று உறுதியாக நம்பினார். அரண்மனைப் பணியாளர்களையும், காவலர்களையும் அழைத்து விசாரித்த போது மன்னருக்கும் யூடெமஸ், களைக்டஸுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் சுமுகமாகவே போய்க் கொண்டிருந்ததென்று சொன்னார்கள். அவர்கள் அருகில் இல்லாத போதும் என்ன நடக்கிறதென்றே தெரியாத தொலை தூரத்தில் அவர்கள் இருக்கவில்லை. மன்னர் ஒரு ஓவியத்தைக் காட்டி யூடெமஸிடம் எதையோ விளக்கிக் கொண்டிருந்தார் என்றும் அதை யூடெமஸ் கேட்டுக் கொண்டிருந்தான் என்றும் சொன்னார்கள். அதன் பின் யூடெமஸும், க்ளைக்டஸும் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள்.

 

சேனாதிபதி நேற்று மாலையே யூடெமஸ் மன்னரிடம் ஐநூறு யானைகளைக் கொண்டு போக அனுமதி பெற்றதாகச் சொன்னதையும், இன்று அதிகாலையிலேயே கிளம்புவதாக நேற்று தெரிவித்ததையும் சொன்னான். ஐநூறு யானைகளை அனுப்பக் கண்டிப்பாக புருஷோத்தமன் அனுமதித்திருக்க மாட்டார் என்று தெரிவித்த இந்திரதத் நேற்று மாலை அவரும், மன்னரும், சேர்ந்து தான் யூடெமஸிடம் விடைபெற்றுத் திரும்பி அரண்மனையில் விருந்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்ததாகச் சொன்னார். அது வரை அவர் மன்னருடன் சேர்ந்தே இருந்ததால் அது குறித்த பேச்சே எழவில்லை என்றும் சொன்னார்.

 

மலயகேதுக்கு ஆத்திரத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. தந்தையின் தகனத்திற்கு முன்பு யூடெமஸை வெட்டி வீழ்த்தி விட்டு வரவேண்டும் என்று அவன் துடித்தான்.   

 

இந்திரதத் மலயகேதுவிடம் சொன்னார். “நீங்கள் நினைப்பது அத்தனை சுலபமல்ல இளவரசே. அதில் நிறைய சிக்கல் இருக்கிறது.”

 

“இந்த நாட்டு மன்னரைக் கொன்று விட்டு இங்கிருந்து ஐநூறு யானைகளை ஒரு யவனன் திருடிக் கொண்டும் போயிருக்கிறான். அப்படியிருப்பதில் அவனைத் தண்டிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது அமைச்சரே?” கோபமிகுதியில் மலயகேது கேட்டான்.

 

”அவன் தான் மன்னரைக் கொன்றான் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் எதுவுமில்லை. சட்டப்படி அவன் தான் கேகயத்தின் நிர்வாகி. அவனுக்குக் கீழ் தான் நாம் இருக்கிறோம். அதனால் அவன் இங்கிருந்து யானைகளை ஓட்டிக் கொண்டு போயிருப்பது அவனுக்கு உரிமையுள்ளதை எடுத்துக் கொண்டு போனபடி தான் எடுத்துக் கொள்ளப்படும்”  

 

மலயகேது கண்ணீருடனும், ஆத்திரத்துடனும் கேட்டான். “அப்படியானால் குற்றவாளியை நாம் அப்படியே விட்டு விடுவதா அமைச்சரே?”

 

“அப்படி நான் சொல்லவில்லை இளவரசே. உங்களுக்கு இணையாக என் இரத்தமும் கொதிக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு நாம் எதுவும் செய்துவிட முடியாது என்று தான் சொல்ல வந்தேன். முதலில் மன்னரின் இறுதிச்சடங்குகளை முறைப்படி செய்து முடிக்கப் பார்ப்போம் இளவரசே. அது முடிந்த பின் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி யோசிப்போம்.”

 

மலயகேது தந்தையின் சடலத்தைப் பெருந்துக்கத்தோடு பார்த்தான். மலை போல் திடமாக இருந்த மனிதரைச் சூழ்ச்சியால் யூடெமஸ் சாய்த்து விட்டானே!

 

அவன் மெல்லக் கேட்டான். “இந்தச் சதியில் க்ளைக்டஸுக்கும் பங்கிருக்குமா அமைச்சரே?”

 

இந்திரதத் சொன்னார். “அவன் பங்கு எதுவுமிருக்க வாய்ப்பில்லை இளவரசே. அவன் நமக்கு முன்பே தெரிந்தவன். யவனன், தன் ஆட்களுக்கு ஆதரவாளன் என்றாலும் கூட கொலை சூழ்ச்சியில் எல்லாம் பங்கு கொள்ளும் நீச்சனாக அவனை நினைக்க முடியாது. அவன் இவனுடன் வரவில்லை. தட்சசீலத்திலிருந்து தனியாக வந்து இங்கே தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதனால் சேர்ந்து சதியாலோசனை செய்திருக்க வழியில்லை. ஆனால் நேற்று யூடெமஸ் செய்ததை அவன் கவனித்திருக்கலாம். தன் எஜமானனைக் காட்டிக் கொடுக்கும் அளவு அவன் சத்தியவானோ, நல்லவனோ அல்ல என்று வேண்டுமானால் சொல்லலாம்.”  

 

அவர் சொன்னது சரியாக இருக்கும் என்றே மலயகேதுவுக்கும் தோன்றியது. அவன் மெல்லத் தலையசைத்தான். அதன் பின் தந்தையின் சடலத்தின் அருகே அமர்ந்து அவன் அழ ஆரம்பித்தான்.

 

மலயகேதுவைப் பார்க்கையில் இந்திரதத்துக்கும் இதயத்தில் இரத்தம் கசிந்தது. சிறு வயதில் இரண்டு சகோதரர்களை இழந்து, இப்போது தந்தையையும் இழந்து நிற்கும் அவன் நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. புருஷோத்தமன் தன் இளைய மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்….

 

கேகய நாடு மன்னரின் ஈமச் சடங்குகளுக்குத் தயாராக ஆரம்பித்தது.   

 

(தொடரும்)

என்.கணேசன்





Wednesday, April 17, 2024

முந்தைய சிந்தனைகள் 101

 என் நூல்களிலிருந்து சில சிந்தனைத் துளிகள்!











என்.கணேசன்

Monday, April 15, 2024

யோகி 45

 

ஷ்ரவன் அன்றிரவே குமரேசனை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தான். ஆட்கள் அதிகமில்லாத அந்த ஓட்டலில் இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசினார்கள். குமரேசனிடம் யோகி ரகுராமன் என்பவரைத் தெரியுமா என்று கேட்ட போது அவன் விழித்த விதத்தில் அவனும் அந்தப் பெயரை முதல் முறையாகத் தான் கேள்விப்படுகிறான் என்பது தெரிந்தது.

 

அந்தப் பேர்ல யாராவது தோட்டக்காரன் வர்றதுண்டா?”

 

இல்லை. அந்தப் பெயரிருக்கற தோட்டக்காரன் யாரும் அங்கே வர்றதில்லை…”

 

பரசுராமன் சைத்ராவைச் சந்தித்திருக்கக்கூடிய இடமாக ஒரு தோட்டத்தைச் சொல்லியிருக்கிறார் என்பதை ஷ்ரவன் குமரேசனிடம் தெரிவித்தான்.  குமரேசன் யோகாலயத்தில் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைத் தெரிவித்தான்.  யோகாலயத்தில் பொதுவெளியில் வெளியாட்களுடன் எந்த சந்திப்பும் நிகழ்வதில்லை என்பதை அவன் சுட்டிக் காட்டினான்.

 

ஷ்ரவன் யோகாலயத்தில் தோட்ட வேலைக்கு வரும் ஆட்களை எல்லாம் விவரிக்கச் சொன்னான். குமரேசனின் வர்ணனைகள் எதுவும் ஒரு யோகியை அடையாளம் காட்டுவதாய் இருக்கவில்லை. அங்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், சினிமாக்காரர்கள் தான் இரண்டாம் கேட்டைத் தாண்டி உள்ளே செல்லும் வெளியாட்கள் என்பது மட்டுமல்ல, அந்த வகையினரிலும் மேல்மட்டத்து ஆட்களே அப்படிச் செல்ல முடியும் என்பதையும் குமரேசன் மறுபடியும் சொன்னான். அந்த இரண்டாம் கேட்டைத் தாண்டி துறவிகள் வசிக்கும் பகுதிக்கு, கால்நடையாய் யோகாலயத்துக்கு வரும் சாதாரண மனிதன் போய்விட முடியாது என்பது தெரிந்தது. சிவசங்கரன் சொன்ன யோகியோ கால்நடையாகத் தான் தோட்ட வேலைக்குச் சென்றவர். காலப் போக்கில் அவரும் மாறி விலையுயர்ந்த காரில் போயிருக்க வாய்ப்பில்லை.

 

அப்படியிருக்கையில் சைத்ரா அவரை எப்போது எப்படி சந்தித்திருக்க முடியும்? கொலை செய்யப்பட்டு இறந்த பின்னும், கொலையாளியைப் பற்றி எதுவும் சொல்லாமல் அந்த யோகியைப் பற்றி மட்டும் ஏன் அவள் தாத்தாவிடம் சொன்னாள்? குழப்பமாக இருந்தது.

 

ஷ்ரவன் சைத்ராவின் ஆவி தெரிவித்த தகவலை குமரேசனிடம் சொன்னான். குமரேசனுக்கு ஆவி பேசுவதையே நம்ப முடியவில்லை. அவன் பார்த்த பார்வையைப் பார்த்துப் புன்னகைத்த ஷ்ரவன் சைத்ராவின் குரலிலேயே ஆவி பேசியது என்று சொன்ன போது குமரேசன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.

 

சிறிது யோசனைக்குப் பின் குமரேசன் சொன்னான். “தமிழ்நாட்டில மத்த பகுதில இருந்தும், வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மடாதிபதிகள், பிரபலமான ஆன்மீகப் பெரியவர்கள் எல்லாம் கூட வர்றதுண்டு. ஆனால் அப்படிப்பட்டவங்களும் சிஷ்யப்படைகள், சேவகர்கள் கூட தான் வர்றாங்க. அப்படி வர்றவங்க தான் பிரம்மானந்தாவைப் பார்க்க முடியும். அப்படி வர்றவங்க கூட பிரம்மானந்தாவைப் பார்த்துப் பேசிட்டு போயிடுவாங்க. சில சமயங்கள்ல பாண்டியன் அல்லது கல்பனானந்தா கூட இருக்கறதுண்டு. அவ்வளவு தான். மத்த துறவிகள் எல்லாம் அந்த ஆள்களைக் கூடப் பார்த்துப் பேச முடியாது. அதனால சைத்ரா இந்த வழக்கமான முறைப்படி அந்த யோகியைப் பார்த்திருக்க சாத்தியமேயில்லை.”

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஷ்ரவனுக்கு சைத்ரா கண்டிப்பாக யோகாலயத்தில் எந்த யோகியையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் வலுத்தது. சைத்ரா யோகாலயத்தில் அந்த யோகியைச் சந்திக்கவில்லை என்றால் எங்கே எப்படி அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கும்?

 

ன்ஸ்பெக்டர் செல்வம் யோகாலயத்திலிருந்து தெரிவிக்கப்பட்ட பதிலால் கடும் அதிருப்தியடைந்தார். இந்த நன்றி கெட்ட மனிதர்களுக்கு உதவி ஏமாந்ததை அவரால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. நேற்றிலிருந்தே அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இன்று அதிகரித்து விட்டது. இன்று கைதான இரண்டு பிக்பாக்கெட் திருடர்களை நையப்புடைத்து அவர் தன் ஆத்திரத்தைச் சிறிது தணித்துக் கொண்டார்.  ஆனாலும் பெருமளவு ஆத்திரம் அவர் மனதில் தங்கியிருந்தது.

 

தபால்காரர் தந்து விட்டுப் போன தபால்களைப் பிரிக்கவும் மனதில்லாமல் செல்வம் அமர்ந்திருந்தார். தூத்துக்குடியில் அவர் போகவிருக்கும் போலீஸ் ஸ்டேஷனின் தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள நேற்றிரவு ஒரு நண்பருக்குப் போன் செய்திருந்தார். அந்த நண்பர் சொன்னதையெல்லாம் கேட்டபோது அவருக்கு வயிற்றைக் கலக்கியது. ஏற்கெனவே அவர் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் மோசம் என்றால் புதிதாய் கேள்விப்படும் இப்போதைய நிலைமை படுமோசமாக இருந்தது. எல்லாம் அறிந்த பின் அவரால் நேற்றிரவு உறங்க முடியவில்லை. சம்பளமல்லாத சம்பாத்தியம் சிறிதுமில்லை, சமாளிக்க முடியாத பிரச்சினைகள் ஏராளம் என்ற இரட்டை நரக வாழ்க்கைக்குப் பயணமாகப் போவதை எண்ணி நொந்தபடி, அன்று வந்த தபால்களை அவர் மேலோட்டமாய் பார்த்தார். அலுவலக ரீதியாய் வந்த கடிதங்களைப் படிக்கப் போவதில்லை என்று அவர் தீர்மானித்து விட்டார். புதிதாய் வருகிறவன் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். ’இனி இங்கு கிடைக்கும் கூடுதல் சம்பாத்தியமெல்லாம் அவனுக்குத் தானே கிடைக்கப் போகிறது. அவனே இந்த வேலையைப் பார்க்கட்டும்என்று தோன்றியது.

 

வந்த தபால்களில் ஒரே ஒரு தபால் அவருடைய பெயருக்கு வந்திருந்தது. அதை மட்டும் எடுத்துப் பிரித்தார். உள்ளே ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்துக் கிழித்து அனுப்பியதாக அது இருந்தது.

 

அன்பில்லாத செல்வம்

தெய்வம் மட்டுமல்ல, ஆவியும் நின்று கொல்லும். இனி தான் என் ஆட்டம் ஆரம்பம்!

சைத்ரா

யோகாலயம்

 

படித்த போது ஒரு கணம் செல்வத்தின் முகத்திலிருந்த ரத்தம் வடிந்து முகம் வெளுத்தது. சாதாரணமாக இதுபோன்ற கடிதங்களை அவர் பொருட்படுத்துபவர் அல்ல. அவர் துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர் தான். ஆனால் சிறிதும் எதிர்பாராத விதமாய் தூத்துக்குடிக்கு மாற்றல் ஆகியிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கும் இந்தக் கடிதம் அவரை அமைதியிழக்க வைத்தது. இந்த இடமாற்ற ஆணையும் கூட ஆவியின் தூண்டுதலாலோ?

 

அவர் உடனே யோகாலயத்துக்குப் போன் செய்தார். ’பார்க்கலாம், இதற்காவது அசைகிறார்களா என்று.’

 

நல்லவேளையாக யோகாலயத்தில் பேசிய துறவி, செல்வம் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, இந்த முறையும்பாண்டியன் சார் பிசிஎன்று சொல்லாமல் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார்.

 

சிறிது நேரத்தில் பாண்டியனின் குரல் கேட்டது. “ஹலோ

 

செல்வம் படபடப்புடன் பாண்டியனிடமும் தனக்கு வந்திருக்கும் கடிதத்தைப் பற்றிச் சொன்னார்.  பாண்டியன் அமைதியாகக் கேட்டார். “அந்தக் கடிதம் சைத்ராவோட ஆவி அனுப்பினதுன்னு நினைக்கறீங்களா?”

 

என்ன நினைக்கறதுன்னு தெரியில. நேத்து தூத்துக்குடிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர். இன்னைக்கு இந்த லெட்டர். பேருக்கு கீழே யோகாலயம்னு வேற போட்டிருக்கு. அதான் உங்களுக்கு உடனே போன் செஞ்சேன்...”

 

பாண்டியனுக்கு மனிதர்களின் அடிமுட்டாள்தனத்தைச் சகித்துக் கொள்வது எப்போதுமே முடியாத காரியம். அவர் கேட்டார். “அவ பேருக்குக் கீழே யோகாலயம்னு போடாம, உங்க போலீஸ் ஸ்டேஷன் பேரைப் போட்டிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”

 

செல்வத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பாண்டியன் சொன்னார். “ஆவி நேர்ல வந்து உங்களுக்கு எதாவது சொல்லியிருந்தால் அதை நம்பறதுல அர்த்தம் இருக்கு. ப்ரிண்டவுட் எடுத்து அனுப்பினதை எல்லாம் ஆவி அனுப்பினதாய் நினைக்கறதுல அர்த்தம் இருக்கா?”

 

பாண்டியன் செல்வத்தின் பதிலுக்குக் காத்திருக்காமல் ரிசீவரை வைத்து விட்டார்.  செல்வத்துக்கு பாண்டியன் கேட்டதில் தவறு தெரியவில்லை. யோசித்தபடியே செல்வம் கடித உறையில் இருந்த தபால் முத்திரையை வாசிக்க முயன்றார். அனுப்பப்பட்ட தபால் ஆபிஸ் முத்திரை படிக்க முடிந்ததாய் இருக்கவில்லை. ஆனால் செல்வத்துக்கு கடிதம் யோகாலயத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. முன்பு சைத்ராவின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் அனுப்பிய நபர் இப்போது இதை அனுப்பியிருக்கலாம்… ’அதைப் புரிந்து கொள்ளாமல் சின்னப் பையனுக்குப் பாடம் நடத்துவது போல் இந்த ஆள் பேசுகிறார். போனை வைக்காமல் இருந்தாலாவது அந்தச் சந்தேகத்தை அவரிடம் சொல்லியிருக்கலாம்...’ 


(தொடரும்)

என்.கணேசன்